அடமான சொத்துக்களை விற்க நடிகை ராதிகாவுக்கு சென்னை ஹைகோரட் அதிரடி தடை
நடிகை ராதிகாவின் சென்னை, நெல்லையில் உள்ள சொத்துக்களை விற்க சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
சென்னை: ரூ2.5 கோடி கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட சொத்துக்களை விற்க நடிகை ராதிகா மற்றும் சரத்குமாருக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராடியன்ஸ் மீடியா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனம் சார்பில், நடிகர் விக்ரம்பிரபு, கீர்த்தி சுரேஷ் நடித்த படம் 'இது என்ன மாயம்'. இப்படத்தின் தயாரிப்புக்காக ராடியன்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனம் ஒன்றரை கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தது.
2014 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட இந்த பணத்தை 2015 மார்ச் மாதத்திற்குள் திருப்பி தருவதாக உறுதி அளித்திருந்தனர். பணத்தை திருப்பிக் கொடுக்காத பட்சத்தில் படத்தை 'டிவி' சேனல்களுக்கு விற்பது உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் ராடியன்ஸ் மீடியாவுக்கே உரியது என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடுதலாக ஒரு கோடி ரூபாய் கடன் கேட்டு தியாகராயநகர் மற்றும் திருநெல்வேலியில் உள்ள சொத்துக்களை அடமானமாக வைத்துள்ளது மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனம். ஆனால் ஒப்பந்தத்தை மீறி படத்தை ரிலீஸ் செய்துவிட்டனர்.
இந்நிலையில் தங்களுக்கு தர வேண்டிய இரண்டரை கோடி ரூபாயை வட்டியுடன் சேர்த்து தர உத்தரவிட கோரியும் அடமானமாக வைத்த சொத்துக்களை விற்க தடை விதிக்க கோரியும் ராடியன்ஸ் மீடியா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடிகை ராதிகா அடமானம் வைத்த சென்னை, நெல்லையில் உள்ள சொத்துக்களை விற்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் நீதிமன்றத்தில் பதில் அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.