மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் செல்லதுரையின் நியமனம் ரத்து.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!
மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் செல்லதுரையின் நியமனத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சென்னை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்லதுரையின் நியமனத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 2 ஆண்டுகளாக துணைவேந்தர் இல்லாமல் இயங்கி வந்தது.
இதனையடுத்து கடந்த ஆண்டு மே 27 ஆம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக செல்லதுரை நியமிக்கப்பட்டார்.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஒருவர் நியமிக்கப்படுவதற்கு அவர் 10 ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும். கல்வியில் சிறந்த பின்னணி கொண்டிருக்க வேண்டும்.
ஆனால், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு அந்தப் பல்கலைக்கழகத்தில் கல்லூரி வளர்ச்சிக் கவுன்சிலின் டீனாகப் பணியாற்றிய பி.பி.செல்லதுரை புதிய துணைவேந்தராக கடந்த ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டார்.
இதனை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தர் செல்லத்துரையின் நியமனத்தை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது.