உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார், சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி?
Recommended Video
சென்னை: சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள இந்திரா பானர்ஜி, விரைவில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலிஜியம் செயல்படுகிறது. அந்த அமைப்பு, இந்திரா பானர்ஜியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்துள்ளதாம். இந்திரா பானர்ஜியுடன் மேலும் இரு ஹைகோர்ட் தலைமை நீதிபதிகளுக்கும், உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம், உச்சநீதிமன்ற பெண் நீதிபதிகள் எண்ணிக்கை 3ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பெண் நீதிபதிகள் ஒரே நேரத்தில் பணிபுரியும் பெருமையை உச்சநீதிமன்றம் பெறும்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.கே.கவுல், உச்ச நீதிமன்ற நீதிபதியானார். இவரையடுத்துதான் 2017ல் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி பொறுப்பேற்றார்.
கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்த இந்திரா பானர்ஜி, 1985ல் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்ததோடு, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் 17 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் 2002 பிப்ரவரி 5ல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட இந்திரா பானர்ஜி, 2016, ஆகஸ்ட் 8ம் தேதி டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
பின்னர், கடந்த ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.