மனு வாபஸ்.. மெரினாவில் நினைவிடம் அமைப்பதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்
மெரினாவில் நினைவிடம் அமைப்பதை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Recommended Video
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் காந்திமதி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையான சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா, எம்ஜிஆர் நினைவிடங்கள் உள்ளன. முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்த பின் மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டார். ஜெயலலிதாவுக்கு அந்த இடத்தில் தமிழக அரசு நினைவிடம் கட்டும் பணியை தொடங்கி உள்ளது.
இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். அதனால், ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க கூடாது என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் துரைசாமி உள்ளிட்டோர் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை எல்லாம் ஒரே வழக்காக விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் எஸ்.துரைசாமி தொடர்ந்த வழக்கு விசாரணையின்போது, தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, "மெரினா கடற்கரையை பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு. கடற்கரை ஒழுங்குமுறை மண்டலப் பகுதிகளில் நினைவிடம் அமையக் கூடாது என்பது என் தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைத்தால் கடற்கரையின் இயற்கை அழகு சீரழிந்துவிடும் என்று வழக்கறிஞர் காந்திமதி காந்திமதி கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் வழக்கறிஞர் காந்திமதி மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் வழக்கறிஞர் காந்திமதி தனது வழக்கை வாபஸ் பெறுவதாக கூறினார். இதையடுத்து வழக்கறிஞர் காந்திமதியின் வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.