ஓகி புயல் போராட்டம்.. 103 பேர் மீதான வழக்கு ரத்து.. ஹைகோர்ட் அதிரடி
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயல் பாதிப்புக்கு நிவாரணம் கேட்டு போராட்டம் நடத்திய 103 பேர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயல் பாதிப்புக்கு நிவாரணம் கேட்டு போராட்டம் நடத்திய 103 பேர் மீதான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தமிழகத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் தேதி தாக்கியது ஓகி புயல். இதனால் கன்னியாகுமரி மாவட்டம் பலத்த சேதத்தை சந்தித்தது.
இந்த புயலுக்கு கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 11 பேர் பலியாயினர். ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த தென்னை, வாழை, ரப்பர், தேக்கு உள்ளிட்ட மரங்கள் வேறோடு சாய்ந்தன. ஏராளமான மீனவர்கள் கரை திரும்பாமல் மாயமாயினர்.
இதையடுத்து மீட்புப்பணிகளை விரைந்து செயல்படுத்தக் கோரியும் நிவாரணத் தொகை வழங்கக்கோரியும் அப்பகுதி மக்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி புதுக்கடை பகுதியில் போராட்டம் நடத்தினர்.
இதுதொடர்பாக 103 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கை ரத்து செய்யக்கோரி பாதிரியார் அன்பரசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்நிலையில் 103 பேரின் மீதான வழக்கை ரத்து செய்துள்ளது.