அரசுப்பணியில் இருந்தாலும் ஆஜராக வேண்டும்..தப்ப முயற்சிக்க கூடாது:கீதாலட்சுமிக்கு ஹைகோர்ட் சாட்டையடி
வருமான வரித்துறை சம்மனுக்கு எதிரான கீதாலட்சுமியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது.
சென்னை: வருமான வரித்துறை சம்மனுக்கு எதிரான எம்ஜிஆர் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்சுமியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது. அரசுப்பணியில் இருந்தாலும் ஆஜராக வேண்டும் என்றும் தப்பிக்க முயற்சிக்க கூடாது என்றும் கீதாலட்சுமியை சென்னை ஹைகோர்ட் கண்டித்துள்ளது.
ஆர்கே.நகர் தொகுதியில் தினகரன் தரப்பு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து அண்மையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் நேரில் ஆஜராக வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினார்கள். இதில் கீதாலட்சுமியை தவிர மற்ற மூவரும் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
வருமான வரித்துறைக்கு எதிர்ப்பு
ஆனால் வருமான வரித்துறை அலுவலகத்தில் கீதாலட்சுமி ஆஜராக மறுத்துவிட்டார். அத்துடன் தமக்கு வருமான வரித்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
துணை இயக்குனருக்கு அதிகாரமில்லை
அதில் 'ஏப்ரல் 10-ந் தேதி (நேற்று) காலை 11.30 மணிக்கு வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று எனக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால், என்னால் நேரில் ஆஜராக முடியாது என்று கூறியதால், வருகிற 12-ந்தேதி நேரில் வரவேண்டும் என்று வருமானவரித்துறை துணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், என்னை நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட துணை இயக்குனருக்கு அதிகாரம் கிடையாது.
தடைவிதிக்க வேண்டும்
என் வீடு, அலுவலகத்தில் ஏப்ரல் 7 மற்றும் 8-ந் தேதிகளில் சோதனை நடந்தது. இந்த சோதனை முடிவதற்கு முன்பே, ஏப்ரல் 10-ந்தேதி நேரில் ஆஜராகவேண்டும் என்று 7-ந்தேதியே சம்மன் அனுப்பியுள்ளனர். இது சட்டப்படி செல்லாது.மேலும், அந்த சம்மனில் எதற்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று எதுவும் குறிப்பிடவில்லை. இதனால் அந்த சம்மனை ரத்து செய்யவேண்டும். எனக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும்'. என கீதாலட்சுமி கோரியிருந்தார்.
கீதாலட்சுமிக்கு கடும் கண்டனம்
இந்நிலையில் அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கீதாலட்சுமியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அரசுப்பணியில் இருந்தாலும் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தப்பிக்க முயற்சிக்கக் கூடாது
கீதாலட்சுமி தப்பிக்க முயற்சிக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி உ்ரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கீதாலட்சுமிக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.