சிலைகடத்தல் வழக்கு.. தமிழக அரசு மீது சென்னை ஹைகோர்ட் அதிருப்தி.. சரமாரி கேள்வி!!
சிலை கடத்தல் வழக்கில் தமிழக அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை: சிலை கடத்தல் வழக்கில் தமிழக அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சிலைகடத்தல் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரித்து வந்தது. ஆனால் இந்த விவகாரத்தில் பொன். மாணிக்கவேல் சிறப்பாக செயல்படவில்லை என கூறி வழக்குகள் அனைத்தையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசின் இந்த அரசாணைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் சிலைகடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க காலக்கெடு எதுவும் இல்லாமல் அண்மையில் இடைக்காலத்தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும் சிலை கடத்தல் வழக்கில் மத்திய அரசுக்கு ஆவணங்களை தராமல் சிபிஐக்கு மாற்றி அரசாணை பிறப்பித்தது ஏன்? என்றும் சிலை கடத்தல் வழக்கில் சிபிஐக்கு ஆவணங்களை தருவதில் தாமதம் ஏன்? என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் சிலைகடத்தல் வழக்கு விசாரணையை நீதிபதிகள் அக்டோபர் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.