தமிழகம் முழுக்க இன்றும், நாளையும் 102 இடங்களில் திமுக கண்டன கூட்டம்.. அரசு தடையை விலக்கியது ஹைகோர்ட்
சென்னை: தமிழகம் முழுவதும் 102 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மீதான மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கண்டன கூட்டம் நடத்த திமுக முடிவு செய்துள்ளது. இன்றும், நாளையும் தமிழகம் முழுக்க 127 இடங்களில் கண்டன கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த கூட்டங்களுக்கு அரசு அனுமதிக்கவில்லை என்பதால், திமுக சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி, மகாதேவன் முன்பு நடைபெற்றது. அரசு தரப்பில், தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி, சட்டம் ஒழுங்கு பாதிப்பு இருப்பதால்தான் அனுமதி தரவில்லை என்றார்.
திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், ஏற்கனவே பிற கட்சியினருக்கு அந்த இடங்களில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று சுட்டிக் காட்டினார்.
இதையடுத்து, 127 விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் 102 இடங்களுக்கு அனுமதியளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 20 இடங்களில் மாற்று இடங்களை பரிந்துரைக்க திமுகவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேநேரம், 5 இடங்களில் போராட்டம் நடத்த திமுகவுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.