திமுக எம்.எல்.ஏக்கள் 79 பேர் சஸ்பெண்ட்- சபாநாயகர் பதிலளிக்க 4 வாரம் ஹைகோர்ட் அவகாசம்
சென்னை: திமுக எம்எல்ஏக்கள் 79 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க சபாநாயகருக்கு 4 வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது,மேலும் வழக்கு வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதக் கூட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி நமக்கு நாமே பயணம் பற்றி அதிமுக எம்.எல்.ஏ பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அவைக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி 79 பேரை ஒரு வார காலம் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவரான மு.க. ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை கடந்த 22ம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 79 பேர் சஸ்பெண்ட் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
மேலும், தலைமைச் செயலாளருக்கும், பேரவைச் செயலாளருக்கும் உயர்நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பி செப்டம்பர் 1ம் தேதிக்குள் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்று இந்த மனு உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. சபாநாயகர் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து, 4 வாரம் அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.