சுவாதி கொலை வழக்கு படம்: இயக்குநருக்கு முன் ஜாமீன் வழங்கியது ஹைகோர்ட்!
சுவாதி கொலை வழக்கை படமாக எடுத்த இயக்குநருக்கு சென்னை ஹைகோர்ட் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
சென்னை: சுவாதி கொலை வழக்கை படமாக எடுத்த இயக்குநருக்கு சென்னை ஹைகோர்ட் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் இயக்குநர் ரமேஷ் செல்வனை கைது செய்யவும் கோர்ட் தடைவிதித்துள்ளது.
மென்மொறியாளர் சுவாதி , கடந்த ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் 'சுவாதி கொலை வழக்கு' என்ற தலைப்பில் திரைப்படமாக வெளிவர உள்ளது. படத்தில் தனது மகள் சுவாதி குறித்து தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதால், படத்தை வெளியிட தடை விதிக்குமாறு, சுவாதி யின் தந்தை கோபாலகிருஷ்ணன், டிஜிபியிடம் புகார் அளித்தார்.
இது தொடர்பாக விசாரித்து வரும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார், 'சுவாதி கொலை வழக்கு' திரைப்படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளருமான ரமேஷ் செல்வன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். சுவாதியின் பெற்றோரிடம் சினிமா எடுக்க முன் அனுமதி பெறவில்லை என்பதாலும், சென்சார் போர்டிடம் சான்றிதழ் பெறாமல் டிரெய்லர் வெளியிட்டதாகவும் கூறி, இயக்குனர் ரமேஷ் செல்வன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இயக்குநர் ரமேஷ்செல்வனுக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது. மேலும் இயக்குனர் ரமேஷ்செல்வனை கைது செய்யக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.