தஷ்வந்த்துக்கு தூக்கு... காம இச்சை கொடூரர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்!
தஷ்வந்த்துக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்.
Recommended Video
சென்னை: தூக்கு தண்டனைக்கு எதிராக போராடிய மாநிலம்தான் தமிழகம். ராஜீவ் கொலை குற்றவாளிகளின் விடுதலைக்காக கோரிக்கைளையும், வேண்டுகோள்களையும் அறிக்கை கணைகளாக தொடுத்து கொண்டுதான் உள்ளோம். தன் வாழ்நாளின் இறுதிவரை நீதிபதி வீ.ஆர்.கிருண்ணய்யரும் தூக்குதண்டனைக்கு எதிராக குரல் கொடுத்தவர்தான். இவை யாவையும் மறுப்பதற்கில்லை.
குற்றங்கள் என்று வந்துவிட்டால், அது உணர்ச்சி வேகத்தில் செய்யப்பட்டதா? ஆதாயத்திற்காக செய்ப்பட்டதா? தன் லட்சியம் ஈடேற செய்யப்பட்டதா என பார்த்து கொண்டு இருக்க முடியாது. காரணம், அது மற்றொரு உயிரை காவு வாங்குவதுதான். உயிரையே கொலை செய்ய துணிந்துவிட்டபோது, காரணங்கள் எதற்கு, கருணைகள் எதற்கு? அப்படிப்பட்ட கொலைகளை செய்தவன்தான் யஷ்வந்த். பிஞ்சு குழந்தைகூட தன் கண்ணுக்கு தெரியாதவனுக்கும், பெற்றெடுத்து ஆளாக்கினவள் என்றுகூட மனசாட்சி இல்லாதவனுக்கும் நீதிமன்றம் கொடுத்துள்ள இந்த தீர்ப்பு முழுக்க முழுக்க சரியானதே.
அசைக்க முடியாத நம்பிக்கை
நீதிமன்றங்கள் மீது பொதுமக்களுக்கு எப்போதும் ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அதனால் எடுத்தோம், கவிழ்த்தோம் என்றெல்லாம் ஜனநாயகத்தின் ஒரு தூண் என்ற சொல்லக்கூடிய நீதிமன்றங்கள், தண்டனைகளை வழங்கி விடுவதில்லை. அதுவும் தூக்குதண்டனையை ஆற அமர யோசித்தும், குற்ற பின்னணியை முழுவதுமாக அறிந்தும், தெளிவான சாட்சியங்களை கொண்டு விசாரித்தும்தான் தூக்கு என்ற தண்டனை வழங்கப்படுகிறது.
எம்ஜிஆர் பாட்டு
"தப்பு செய்தவன் திருந்த பார்க்கணும்; தவறு செய்தவன் வருந்தியாகணும்' என்று மக்கள் திலகம் ஒரு பாட்டிலே சொன்னாலும் அந்த குற்றங்களை செய்தவர்கள் எல்லாம் ஒரு முறையாவது மன்னிக்கப்பட கூடியவர்கள், சந்தர்ப்பம் அளித்தால் திருந்த வாய்ப்பு என்று நம்பக் கூடியவர்கள். ஆனால், தஷ்வந்த் விவகாரம் அப்படி கிடையாது.
மண்பொம்மைகூட காமம்தான்
சிறையிலுள்ள 7 ராஜீவ் கொலைக்குற்றவாளிகள் கூட கொலையில் தொடர்புடையவர்கள்தான். ஆனால் தஷ்வந்த், தன் கரங்களாலேயே இரு கொலைகளை அரங்கேற்றியவன். காமத்தின் உச்சியில் நின்று பார்த்தால் ஒரு 'மண் பொம்மை' கூட பெண் போலதான் தெரியும், கொலை, கற்பழிப்பு, நாடகம், தப்பியோட்டம், நகைகள் திருட்டு... என ஒட்டுமொத்த குற்றங்களையும் இவ்வளவு சிறிய வயதில் ஒரு இளைஞன் தன்னிடத்திலே வைத்திருப்பானா? இப்படிப்பட்டவனை இனியும் சமூகத்தில் நடமாட விட்டால், ஏற்கனவே வன்முறை தாண்டவமாடி சின்னாபின்னாமாகி கொண்டிருக்கும் தமிழகத்தின் நிலை என்னவாக இருக்கும் என்று யோசிக்ககூட முடியவில்லை.
நூற்றுக்கு நூறு சரியே
தூக்கு தண்டனை என்ற ஒன்று அமலில் இருக்கும்போதே, இவ்வளவு மாபாதகங்களை செய்ய பலருக்கு எப்படித்தான துணிவு வருகிறதோ? முன்ஜாமீனோ, நிபந்தனை ஜாமீனோ.. ஏதோ ஒன்றிலிருந்து எப்படியாவது வெளியே வந்துவிடலாம் என் ஆங்காரத்திலும், அதிகார துஷ்பிரயோகம் காரணமாகவும் கொடூரங்களை சர்வசாதாரணமாக நடத்தி கொண்டிருக்கும் சில கொழுத்த நபர்களுக்கும், மற்ற காம இச்சை கொடூரர்களுக்கும் தஷ்வந்த்தின் தூக்கு ஒரு பாடமாக இருக்கட்டும். தாங்கள் செய்யும் குற்றத்தை ஒப்புக்கொள்ளாமலும், செய்த குற்றங்களுக்கு வருந்தாலும் உள்ள கேடுகெட்ட யஷ்வந்த்போல ஜென்மங்களுக்கு தூக்கு தண்டனை வழங்கியது என்பது நூற்றுக்கு நூறு சரியானதே!