ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா: குற்றம் சாட்டப்பட்டவர் பெயர்களை ஏன் குறிப்பிடவில்லை? நீதிபதி கேள்வி
சென்னை: ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம், தமிழக அரசு, ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி, சென்னை காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதா மரணமடைந்ததைத் தொடர்ந்து அவர் வெற்றி பெற்ற ஆர்.கே. நகர் சட்டசபை தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இடைத்தேர்தலின் போது அதிக அளவு பணப்பட்டுவாடா செய்தது உறுதிப்படுத்தப்பட்டதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பணப்பட்டுவாடா தொடர்பாக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யகோரி ஹைகோர்ட்டில் வைரக்கண்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், சுந்தர் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. காவல்துறையினரின் வழக்கு பதிவு, விசாரணை குறித்த ஆவணங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
அதன்படி இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதன்படி தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தார். மேலும் இந்த ஆவணம் நீதிமன்றத்திற்கு மட்டும் என்று தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், ஏற்கனவே ஆர்டிஐ தகவல் வெளியான நிலையில், ஏன் நீதிமன்றத்துக்கு மட்டும்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு தேர்தல் ஆணைய வழக்கறிஞர், "அது தலைமை தேர்தல் அதிகாரிக்கு மட்டுமே அனுப்பப்பட்ட நகல் எனவே யாருக்கும் கொடுக்க இயலாது" என தெரிவித்தார்.
மேலும் அதில் வருமான வரித்துறை சோதனைகளில் கைப்பற்றப்பட்ட பணப்படுவாடா தொடர்பான பட்டியலும், புகார்களும் உள்ளது என்றார். இதனையடுத்து காவல்துறை தரப்பில் இந்த வழக்கு குறித்த ஆவணங்களை சிடியாக தாக்கல் செய்தனர்.
அப்போது நீதிபதிகள் வருமான வரித்துறை அறிக்கையில் பணம் பட்டுவாடா தொடர்பாக மூன்று பெயர்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உங்கள் எப்.ஐ.ஆரில் குற்றம் சாட்டப்பட்டவர் பெயர் என்ற இடம் காலியாக உள்ளது. ஏன் பெயர் குறிப்பிடவில்லை ? என மீண்டும் காவல்துறைக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் எந்த பதிலும் அளிக்கவில்லை.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம், தமிழக அரசு மற்றும் ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி, சென்னை காவல்துறை ஆணையர் ஆகியோர் வரும் 14ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.