கிருஷ்ணராயபுரம் அதிமுக எம்எல்ஏ கீதாவை மீட்க கோரி கணவர் வழக்கு- சசிகலாவுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்!
எம்எல்ஏ கீதாவை மீட்டுத் தர கோரிய வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை: கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதாவின் கணவர் மணிவண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் திங்கள் கிழமைக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சசிகலா தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழக முதல்வர் ஓபிஎஸ் திடீரென, "ராஜினாமாவிற்கு கட்டாயப்படுத்தப்பட்டேன்" என்று பேட்டி அளித்தார். இதனால் மன்னார்குடி கோஷ்டி ஆட்டம் கண்டது. மேலும், சசிகலா முதல்வராகும் கனவிற்கு பலத்த அடி விழுந்தது. இதனால் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு அளித்துவிடப் போகிறார்கள் என்ற அச்சத்தில், எம்எல்ஏக்களை கூவாத்தூரில் உள்ள ரிசார்ட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், தனது மனைவியைக் காணவில்லை என கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதாவின் கணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவரது மனுவில் என் மனைவியின் தந்தை உடல்நலம் சரியில்லாம் வீட்டில் இருக்கிறார் அவருடைய உடல் நலம் குறித்த தகவல் தெரிவிப்பதற்காக கீதாவின் செல்போனில் தொடர்பு கொண்ட போது தொடர்ந்து சுவிச் ஆப் செய்திருப்பதாக சொல்லிக் கொண்டே இருக்கிறது. இதனால் அவசர செய்தியைக் கூட சொல்ல முடியாமல் தவிக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து வரும் திங்கள் கிழமைக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சசிகலாவிற்கும் தமிழக காவல்துறைக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.