ஜி.பி.எஸ் உடன் ஆட்டோ மீட்டர் பொருத்தும் பணி... 8 மாதத்தில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை : ஜி.பி.எஸ் வசதியுடன் கூடிய ஆட்டோ மீட்டர் பொருத்தும் பணிகளை 8 மாதத்தில் முடிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு சென்னையில் ஓடும் ஆட்டோகளுக்கு, 2014-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதிக்குள், மின்னணு ரசீது வழங்கும் வசதிகளுடன் கொண்ட ஜி.பி.எஸ். கருவி இலவசமாக பொருத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்து.
ஆனால் இதை செயல்படுத்தாததால் மெட்ராஸ் மெட்ரோ ஆட்டோ டிரைவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஷேஷசயனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜி.பி.எஸ்.கருவிகளை வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி பணிகளை 2 மாதத்தில் முடிக்க 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், டெண்டர் பணிகளை முடித்த அடுத்த 8 மாதத்தில் சென்னை முழுவதுமுள்ள ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்தி முடிக்கவேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.