லதா ரஜினிகாந்த்தின் நிறுவனத்தை போலீஸ் உதவியுடன் அகற்றலாம்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!
லதா ரஜினிகாந்த்தின் நிறுவனத்தை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: லதா ரஜினிகாந்த்தின் ட்ராவல்ஸ் நிறுவனத்தை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆழ்வார்பேட்டை, சி.பி. ராமசாமி சாலையில், மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இதில் ஒரு கட்டடத்தில், கடந்த 25 ஆண்டுளாக நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், 'டிராவல் எக்சேஞ்ச் இந்தியா பிரைவேட் லிமிட்டெட்' என்ற பெயரில் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனத்தின் கட்டட வாடகையாக மாதம் ரூ.3 ஆயிரத்து 702-ஐ லதா ரஜினிகாந்த் செலுத்தி வந்தார். இந்த நிலையில், வாடகை தொகையை ரூ.21 ஆயிரத்து 160 ஆக உயர்த்தி சென்னை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.
வாடகையை செலுத்த மறுத்த லதா ரஜினிகாந்த் இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சி மீது உயர்நீதிமன்றத்தில் வழக்க தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது லதா ரஜினிகாந்தின் ட்ராவல்ஸ் நிறுவனத்தை போலீஸ் உதவியுடன் சென்னை மாநகராட்சி அகற்றலாம் என நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டார். மேலும் லதா சார்பில் தொடரப்பட்ட வழக்கையும் நீதிபதி வைத்தியநாதன் தள்ளுபடி செய்தார்.