கொடுங்கையூர் சிறுமிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூர் ஆர் ஆர் நகரைச் சேர்ந்த 5 சிறுமிகள் நேற்று முன்தினம் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பாவனா என்ற 10 வயது சிறுமியும் யுவஸ்ரீ என்ற 8 வயது சிறுமியும் மின் இணைப்பு பெட்டியில் இருந்து அறுந்து தொங்கிய மின்கம்பியை தவறுதலாக மிதித்தனர்.
இதில் 2 சிறுமிகளும் படுகாயமடைந்தனர். இதையடுத்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 2 சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. சிறுமிகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறிஙதது தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில் உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமிகளின் குடும்பத்துக்கு ஒரு வாரத்தில் இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழக அரசு சார்பில் தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மின்வாரிய ஊழியர்கள் 8 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.