சிபிஐ வளையத்திற்குள் விஜய பாஸ்கரையடுத்து எடப்பாடி பழனிச்சாமி.. டெல்லி புள்ளிகள் குஷி!
Recommended Video
சென்னை: குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக ஏற்கனவே தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் சிபிஐ விசாரணையை எதிர்கொண்டு வரும் நிலையில், இப்போது முதல்வரும் மற்றொரு வழக்கில் சிபிஐ விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளார்.
2016ம் ஆண்டு மாதவரத்தில் குட்கா குடோனில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக சிக்கிய டைரியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரும் இருந்தது.
இதற்கிடையே திமுக எம்.எல்.ஏ.வும், சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான ஜெ.அன்பழகன் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில், சிபிஐ விசாரணை தேவையில்லை என தொடர்ந்து வாதிட்டு வந்தனர்.
[தமிழக அரசுக்குப் பெரும் பின்னடைவு.. அடுத்தடுத்து சிபிஐக்கு போகும் முக்கிய வழக்குகள்!]
விஜயபாஸ்கர்
ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கை நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் அமர்வு, சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இதனால் விஜயபாஸ்கருக்கு நெருக்கடி அதிகரித்தது. அவரது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய எதிர்க்கட்சிகள் வற்புறுத்தின. ஆனால், அவர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார்.
ரெய்டுகள்
இதனிடையே கடந்த மாதம், சிபிஐ அதிகாரிகள் விஜயபாஸ்கர் வீட்டில் திடீர் ரெய்டு நடத்தினர். அன்றைய தினம் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் இல்லத்திலும் ரெய்டுகள் நடந்தன. டிஜிபி ராஜேந்திரனும் ரெய்டில் தப்பவில்லை. இத்தனை நடந்த பிறகும்கூட அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டார்.
முதல்வரே சிக்கியுள்ளதால்
இந்த நிலையில் நெடுஞ்சாலை துறை ஊழல்கள் தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த, வழக்கில், சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் யாராவது சிபிஐ விசாரணை வளையத்தில் சிக்கினால் அவர்களை ராஜினாமா செய்ய முதல்வர் உத்தரவிடுவது வழக்கம். ஆனால், இப்போது தமிழக முதல்வரே சிபிஐ விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளதால், இனிமேல் விஜயபாஸ்கர் பதவிக்கு ஆபத்தில்லை என்று அவர் ஆதரவாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிடுகிறார்களாம்.
பின்னடைவு
ஆனால், முதல்வரே சிபிஐ விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளது தார்மீக ரீதியாக, மாநிலத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், எதிர்க்கட்சிகள் முதல்வரை ராஜினாமா செய்ய வலியுறுத்தியுள்ளன. ஆரம்பகட்ட விசாரணையை முடித்து 3 மாதங்களில் வழங்க வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளதால் முதல்வருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. ஆனால், டெல்லியில் சிலருக்கு இது உற்சாகத்தை கொடுத்துள்ளதாம். சிபிஐ ரெய்டுகளை விட்டு விளையாடலாம் என்பதுதான் இதற்கு காரணமாம். தமிழகத்திலும், எடப்பாடிக்கு எதிரணி முகாம் குஷியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புகார்
திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம் சாலை திட்டங்கள் உட்பட தமிழகத்தில் நடைபெற்ற ரூ.4800 கோடி ரூபாய் திட்ட மதிப்பிலான பணிகளில் உறவினர்கள், நண்பர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து முறைகேடு நடந்துள்ளது என்றும், ஆர்.எஸ்.பாரதி தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.