கப்பல்கள் விபத்துக்குள்ளான விவகாரம்: மீனவர்களுக்கு 4 வாரங்களில் இழப்பீடு வழங்க ஹைகோர்ட் உத்தரவு!
சென்னை அருகே கப்பல்கள் விபத்துக்குள்ளான விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 4 வாரங்களில் இழப்பீடு வழங்க சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: எண்ணூர் துறைமுகம் அருகே இரண்டு கப்பல்கள் விபத்துக்குள்ளான விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 4 வாரங்களில் இழப்பீடு வழங்க சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பி.டபிள்யூ. மேப்பிள் என்ற கப்பலும், துறைமுகத்துக்கு உள்ளே வந்த எம்.டி.டான் காஞ்சிபுரம் என்ற இரு கப்பல்களும் மோதி விபத்துக்குள்ளாயின.
இதில், எம்.டி.டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்த எண்ணெய் டேங்க் சேதம் அடைந்தது. இதனால், எண்ணெய் கடல் தண்ணீரில் பரவியதால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டது.
கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் பரவியதால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி மீனவர்கள் சங்கத் தலைவர் செல்வராஜ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 4 வாரங்களில் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.