ரவுடி ஸ்ரீதர் உடலை கொண்டு வர 24 மணிநேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு!
ரவுடி ஸ்ரீதரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர 24 மணி நேரத்துக்குள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: ரவுடி ஸ்ரீதரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் எந்த சிக்கலும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஸ்ரீதரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர தேவையான ஆவணங்களை 24 மணி நேரத்துக்குள் தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரவுடி ஸ்ரீதரின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி ஸ்ரீதர் மகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தனது தந்தை மீது காஞ்சிபுரம் போலீசார் ஏராளமான வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளில் அவரை தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.
தனது தந்தையை கைது செய்ய தமிழக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தனர் என்றும் இதற்காக அவரது பாஸ்போர்ட்டை மத்திய அமலாக்கப்பிரிவு முடக்கி உள்ளது என்றும் கூறியுள்ளார். கடந்த 4-ந் தேதி இங்கிலாந்தில் படித்துவரும் எனது சகோதரன் சந்தோஷ் எனக்கு போன் செய்து, தந்தை கம்போடியா நாட்டில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்ததாகவும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
பாஸ்போர்ட் முடக்கம்
இதையடுத்து தான் கம்போடியா நாட்டுக்கு சென்றபோது தனது தந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை நிர்வாகம் அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார் எனக்கூறி சான்றிதழ் கொடுத்துள்ளது. தனது தந்தையின் பெயரில் உள்ள பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கியுள்ளதால், கம்போடியா நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகி தந்தையின் உடலை இந்தியாவுக்கு எடுத்துச்செல்ல உதவுமாறு கோரிக்கை விடுத்ததாகவும் கூறியுள்ளார்.
மத்திய அரசுக்கு உத்தரவிட கோரிக்கை
ஆனால் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு இதுகுறித்து கோரிக்கை கடிதம் அனுப்பினால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று தூதரக அதிகாரிகள் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். தனது தந்தையின் உடலை அடக்கம் செய்வதற்காக இந்தியாவுக்கு கொண்டுவர தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஸ்ரீதரின் மகள் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
உடலைக் கொண்டு வர முடியுமா?
இந்நிலையில் அவரது மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் முடக்கப்பட்ட பாஸ்போர்ட் மூலம் உடலைக் கொண்டு வர முடியுமா என கேள்வி எழுப்பினர். இது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டனர். மேலும் பிற்பகல் 2:15 மணிக்கு பதில் தர மத்திய அரசுக்கு உத்தரவிட்டு ஒத்திவைத்தனர்.
மத்திய அரசு பதில்
இதைத்தொடர்ந்து 2.15 மணிக்கு அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்ரீதர் உடலை கொண்டு வருவதில் எந்த சிக்கலும் இல்லை என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் சு.சீனிவாசன் தெரிவித்தார்.
ஆவணங்களை தாக்கல் செய்ய ஆணை
இந்திய அரசின் பாஸ்போர்ட் அடிப்படையில் ஸ்ரீதர் உடலை ஒப்படைக்க கம்போடியா அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். இதையடுத்த ஸ்ரீதர் உடலை கொண்டுவர தேவையான ஆவணங்களை உடனே தாக்க செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கு முடித்து வைப்பு
மேலும் 24 மணிநேரத்துக்குள் ஆவணங்களை தாக்கல் செய்து உடலைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையையும் சென்னை ஹைகோர்ட் முடித்து வைத்தது.