நிபந்தனைகளை பாரதிராஜா நிறைவேற்றுவதில் என்ன தயக்கம்.. ஹைகோர்ட் கேள்வி
தினமும் மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாரதிராஜாவால் கீழ் நீதிமன்றத்தை அணுக முடியாதது ஏன்? என்று 2வது முறையாக முன்ஜாமீன் கோரியது பற்றி இயக்குநர் பாரதிராஜாவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: தினமும் மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாரதிராஜாவால் கீழ் நீதிமன்றத்தை அணுக முடியாதது ஏன்? என்று 2வது முறையாக முன்ஜாமீன் கோரியது பற்றி இயக்குநர் பாரதிராஜாவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உயர்நீதிமன்றம் ஏற்கனவே முன்ஜாமீன் கொடுத்தபோது கீழ் நீதிமன்றத்தை பாரதிராஜா அணுகவில்லை என கூறப்படுகிறது. சென்னையில் ஜனவரி 18ம் தேதி நடந்த திரைப்பட விழா ஒன்றில் இயக்குனர் பாரதிராஜா பங்கேற்று பேசினார்.
அப்போது, இந்து மத கடவுகளான விநாயகரை இறக்குமதி கடவுள் என்று விமர்சித்த அவர், ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்பட்டால் தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம் என்றும் ஆவேசமாக பேசினார்.
இந்து மக்கள் முன்னணி புகார்
இதையடுத்து, இரு பிரிவினரிடையே வன்முறையை ஏற்படுத்தும் வகையில் பாரதிராஜா பேசியதாக இந்து மக்கள் முன்னணி சார்பில் வடபழனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
பாரதிராஜா மனு
அதன் அடிப்படையில், வடபழனி போலீசார் பாரதிராஜா மீது இரு பிரிவினருக்கிடையே பிரச்சனையை தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு பாரதிராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
நிபந்தனை ஜாமீன்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.ராஜமாணிக்கம் பாரதிராஜாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கினார். மேலும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து முன்ஜாமீனை பெற்று கொள்ளலாம் என்றும் 3 வாரம் தினமும் வடபழனி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
ஜாமீன் பெறவில்லை
இந்த முன்ஜாமீனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 15 நாட்களுக்குள் பெற்று கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் பாரதிராஜா 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் முன்ஜாமீனை பெறவில்லை.
அதே நீதிபதி
எனவே 2வது முறையாக முன்ஜாமீன் வழங்கக் கோரி புதிய மனு ஒன்றை பாரதிராஜா தாக்கல் செய்தார். இந்த மனு இன்று மீண்டும் நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது.
என்ன தயக்கம்?
அப்போது, தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாரதிராஜாவால் கீழ் நீதிமன்றத்தை அணுக முடியாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். மேலும் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை பாரதிராஜா நிறைவேற்றுவதில் என்ன தயக்கம் என்றும் அவர் காட்டமாக கேட்டார்.
பாரதிராஜாவுக்கு கேள்வி
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருந்த முன்ஜாமீனை ஏன் பெறவில்லை என்றும் பாரதிராஜாவின் வழக்கறிஞரிடம் கேட்டார் நீதிபதி. இதனைத் தொடர்ந்து பாரதிராஜாவிடம் விளக்கம் கேட்டு பதிலளிப்பதாக வழக்கறிஞர் கூறியதையடுத்து வழக்கு விசாரணை ஜூலை 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.