சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிரான தமிழக அரசின் அவதூறு வழக்குகள்: விசாரணைக்கு ஹைகோர்ட் இடைக்கால தடை
சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக, தமிழக அரசு சார்பில் தொடர்ந்த ஆறு அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை, அதற்காக அவர் பெற்று வரும் சிகிச்சை, தமிழக அரசின் நிர்வாகம் குறித்து டுவிட்டர் பக்கத்தில் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீது தமிழக அரசின் சார்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆறு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளில் பல்வேறு தேதிகளில் சுப்பிரமணியன்சுவாமி நேரில் ஆஜராகுமாறு "சம்மன்' அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், நேரில் ஆஜராக அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக்கோரியும், அவதூறு வழக்கின் விசாரணைக்கு தடை கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சுப்ரமணியன் சாமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆறு அவதூறு வழக்குகளின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.