சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்காக நில உரிமையாளர்களை வெளியேற்ற ஹைகோர்ட் தடை.. காரணம் இதுதான்
Recommended Video
சென்னை: சேலம்-சென்னை நடுவேயான 8 வழிச்சாலை திட்டத்திற்காக நில உரிமையாளர்களை கட்டாயப்படுத்தி வெளியேறற, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் கனகராஜ் அளித்த பேட்டி:
எங்கள் வாதத்தில் முக்கியமாக இரு விஷயங்களை ஹைலைட் செய்தோம். முதலாவது விஷயம், இந்தியாவில் உள்ள எந்த ஒரு வனப்பகுதியிலும் நிலம் கையகப்படுத்த வேண்டும் என்றால் உச்ச நீதிமன்றத்தை அணுகி மத்திய எம்பவரிங் கமிட்டியிடம் அனுமதி பெற வேண்டும் .
சேலம்-சென்னை பசுமை வழி சாலை திட்டத்திற்காக, 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு வனப்பகுதிக்குள் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே இது சட்டத்திற்கு புறம்பானது என்பதால் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வாதிட்டோம். உச்சநீதிமன்றம் ஏற்கனவே அமைத்துள்ள சென்ட்ரல் எம்பவரிங் கமிட்டியிடம் அனுமதி பெறவில்லை என்பது அரசு செய்த தவறான முன்னுதாரணம்.
மேலும், நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ள பகுதிகளில் கல்வராயன் மலை, சேர்வராயன் மலை மற்றும் கவுத்தி மலை ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது. கவுத்தி மலையை பொறுத்த வரையில் அங்கு ஒரு இன்ச் கூட நிலம் கையகப்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அந்த தீர்ப்புக்கு எதிராக நிலத்தை கையகப்படுத்த அரசு நோட்டிபிகேஷன் போடுவது தவறானது என்றும் வாதிட்டோம். எனவே விவசாயிகள், நிலவுடமைதாரர்களை யாரும் தொந்தரவு செய்து கட்டாயப்படுத்தி வெளியேற்றக் கூடாது என்று நீதிமன்றம், உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேபோல வனப்பகுதியில் உள்ள எந்த மரத்தை வெட்டக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை, அடுத்த மாதம் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளத. இவ்வாறு வழக்கறிஞர் கனகராஜ் தெரிவித்தார்.
சேலம்-சென்னை நடுவேயான சாலை திட்டத்திற்கு நிலம் எடுக்க ஹைகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளதாக முதலில் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், நீதிமன்றத்தின் உள்ளே கிடைத்த உறுதியான தகவல் அடிப்படையில், அப்படியான உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்பதும், நில உரிமையாளர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றவே தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது.