உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்தான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
சென்னை : உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பை 2017 செப்டம்பர் 18க்குள் வெளியிட்டு, நவம்பர் 17ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு செப்டம்பர் 4ம் தேதி உத்தரவிட்டது.
ஆனால், அதன்படி தேர்தல் ஆணையம் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் தேர்தல் ஆணையத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதாடினார். வேண்டுமென்றே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தாமதிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.
தொகுதி மறுசீரமைப்பு வரையறைக்காட்டி தேர்தல் தாமதப்படுத்தப்படுகிறது. தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தவேண்டும் என்று அரசை நிர்பந்திக்கவில்லை என்று வாதிடப்பட்டது. தேர்தலை வேண்டுமென்றே தேர்தல் ஆணையரும் , அதிகாரத்தில் இருப்பவர்களும் தாமதிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.
இதனை அடுத்து தேர்தல் ஆணையம் தனது தரப்பு வாதத்தை முன்வைத்தது. தமிழகத்தில் தேர்தலைத் தாமதிக்க தங்களுக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை. தொகுதி மறுசீரமைப்புக்கான உரிமை தமிழக அரசிடம் உள்ளது. மறுசீரமைப்பு குறித்து அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனால் தேர்தல் தாமதமாகத் தேர்தல் ஆணையம் காரணமில்லை. இதற்காக எங்களின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர எந்த முகாந்திரமும் இல்லை. இதனால் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து தேர்தல் ஆணைய அதிகாரிகளை விடுவித்தனர். மேலும் வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.