ஜாலியாக மாறிய ஹோலி... சென்னையில் வட இந்தியர்கள் உற்சாகக் கொண்டாட்டம்
சென்னை: வட இந்தியாவில் விமரிசையாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை இன்று சென்னையிலும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது
ஹோலி என்னும் வார்த்தை, ஹோலகா என்ற வடமொழி சொல்லின் திரிபே என்று கூறுவர். ஹோலகா என்பது முற்றிய நிலையில் உள்ள மொச்சைக் கதிர்களைக் குறிக்குமாம். அக்காலத்தில் இந்நாளில் கோதுமை, பார்லி முதலியவற்றால் வேள்வி செய்வர். வேள்வியின் நிறைவில் யாகத்தின் சாம்பலை நெற்றியில் பூசிக்கொள்வதோடு அனைத்து திசைகளிலும் தூவுவர்.
இப்படிச் செய்வதே பின்னாளில் வண்ணங்களைத் தூவும் வழக்கம் ஏற்பட காரணம் என்று கூறுகிறார்கள்.
ஹோலியின் நோக்கம்...
சாயத் தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பது, கலர்ப்பொடி தூவுவது ஆகியவை, உறவுகள் பலப்படவேண்டும், பகையை மறந்து ஒன்று சேரவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட விஷயங்களாகும்.
வரலாறு...
சிவபெருமான் மன்மதனை எரித்த காமதகன விழாவாக தென்னிந்தியாவிலும், பூதனை என்னும் அரக்கியை பாலகிருஷ்ணர் கொன்ற நாளாக வடநாட்டிலும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. நம் மனதில் இருக்கும் வேண்டாத தீய எண்ணங்களை அழிப்பதற்காக மன்மதன், பூதனை போன்ற உருவபொம்மைகளை தீயிலிடுவர்.
தமிழகத்திலும்...
வட இந்தியாவில் பிரபலமான ஹோலி கடந்த சிலவருடங்களாக தமிழகத்திலும் பிரபலாகியுள்ளது. சென்னையில் வட இந்தியர்கள் அதிகம் வசிக்கும் செளகார்பேட்டையில் இது இன்று வழக்கம் போல விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கொண்டாட்டம்...
ஹோலியையொட்டி இன்று கடைகளுக்கு அங்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. ஆண்களும், பெண்களும் குடும்பம் குடும்பமாக கூடி கலர்ப் பொடிகளைத் தூவியும், வண்ண நீரைத் தெளித்தும், ஆடல் பாடல்களுடன் உற்சாகமாகக் கொண்டாடினர்.