கனமழையால் ஊர், ஊராக சுற்றி திருப்பத்தூரில் நின்ற ஹவுரா ரயில்; பயணிகள் கோபம்
திருப்பத்தூர்: கனமழை காரணமாக ஊர், ஊராக சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் சுற்றிவந்த ரயிலால் பயணிகள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து வாராந்திர ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 15 ஆம் தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
இந்த ரயில் விஜயவாடா வழியாக 30 மணி நேரத்தில் சென்னை எழும்பூரை சென்றடைய வேண்டும். ஆனால் ஆந்திராவில் கனமழை பெய்வதால் விஜயவாடாவில் இருந்து காவேளி, குண்டூர், எலங்கா, டோண்ட் வழியாக திருப்பி விடப்பட்டு கடந்த 2 நாட்களாக ஊர், ஊராக சுற்றி வந்தது. சாப்பாடு, குடிநீர், கழிவறையில் தண்ணீர் இல்லாமல் பயணிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை 9.20 மணிக்கு ரயில் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் வந்து நின்றது. அப்போது அதிகாரிகள் ஹவுரா எக்ஸ்பிரஸ் சென்னை செல்லாது. சென்னை பயணிகள் இங்கு இறங்கி ஜோலார்பேட்டை வழியாக செல்லலாம் என தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், ரயில்வே அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள், தங்களது உடமைகளுடன் ரயில் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும், திருப்பத்தூர் ரயில் நிலைய அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதன் பிறகு ரயில் 11 மணிக்கு திருப்பத்தூரில் இருந்து காட்பாடி வழியாக சென்னைக்கு புறப்பட்டு சென்றது.