சென்னை கார் ரேஸ்: தடுத்த இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்- கைதானவர்கள் ஜாமீனில் விடுவிப்பு
சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் சட்டவிரோதமாக கார் ரேஸில் ஈடுபட்டவர்களை மடக்கிப் பிடித்த காவல்துறையினர், உடனடியாக 9 பேரை சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளனர்.
சென்னை: சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் ஞாயிறன்று சட்ட விரோதமாக கார் ரேஸ் நடத்திய 10 பேரை கைது செய்து அவர்களின் விலை உயர்ந்த சொசுகு கார்களை பறிமுதல் செய்தனர். மேல்மட்ட அழுத்தம் காரணமாக கார் பந்தையத்தில் ஈடுபட்ட 9 பேரை சொந்த ஜாமீனில் போலீசார் விடுவித்துள்ளனர்.
வார விடுமுறை நாட்களில் சென்னை கிழக்குக் கடற்கரை சாலைகளில் கார், பைக் ரேஸ்கள் நடந்து வருகின்றன. ஆபத்தான இந்த பந்தையங்களினால் விபத்துக்கள் ஏற்பட்டு பலரது உயிர் பறிபோயுள்ளது.
கார் பந்தையம், பைக் பந்தையம் நடத்த காவல்துறை தடை விதித்துள்ளது. தடையை மீறி சில வசதிபடைத்த இளைஞர்கள் கார் பந்தையங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
காவல்துறை எச்சரிக்கை
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பந்தயத்தில் ஈடுப்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்த செயல்கள் சற்று குறைந்துள்ள நிலையில் மீண்டும் தொடங்கியுள்ளது.
சொகுசு கார் ரேஸ்
ஞாயிறன்று கிழக்கு கடற்கரை சாலையில் நீலாங்கரை அடுத்த உத்தண்டி அருகே பென்ஸ், லம்போஹினி, பி.எம்.டபிள்யூ போன்ற கோடிக்கணக்கான மதிப்புள்ள 15 சொகுசுக் கார்கள் பந்தயத்தில் ஈடுப்பட்டது.
சீறிப்பாய்ந்த கார்கள்
இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்மந்தப்பட்ட கார்களை பிடிப்பதற்காக சோதனையில் ஈடுபட்டனர். உத்தண்டி சோதனைச் சாவடியில் 10கார்கள் மட்டுமே பிடிப்பட்டது. மீதமுள்ள 5கார்கள் நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது. இதனையடுத்து பிடிப்பட்ட கார்கள் கானாத்தூர் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
போலீசுக்கு மிரட்டல்
பந்தையத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போது சொகுசுக் கார் ஒன்று விசாரணை செய்துக் கொண்டிருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் சவுந்திரராஜனின் காலில் ஏற்றியபடி சென்னையை நோக்கி வேகமாக சென்றதாக தெரிகிறது.
பந்தையம் நடத்தியது யார்?
இதையடுத்து கானத்தூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து கார் உரிமையாளர்களிடம் போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் கார் ரேஸ் நடத்தியவர்கள் பெயர் ஸ்ரீசாத், விக்னேஸ்வரன், கிஷால், சங்கர், பிரசன்னா, ராகவேந்திரன், கரன், ராஜகோபால், எஸ்காணி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள பெரும்புள்ளிகளின் மகன்கள் என்பது தெரியவந்துள்ளது.
இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்
இந்நிலையில் கார் உரிமையாளர்களிடம் விசாரித்து கொண்டிருக்கும்போது அவர்கள் உயர் அதிகாரிகளிடம் பேசி அங்கிருந்த காவல்துறையினருக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. கார் ரேஸை தடுத்து நிறுத்திய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஜாமீனின் விடுவிப்பு
பந்தையத்தில் ஈடுபட்ட 10 பேர் மீதும் வேகமாக கார் ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உயர்மட்ட வற்புறுத்தல் காரணமாக அனைவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரிசையில் நிற்கும் கார்கள்
இன்ஸ்பெக்டர் மீது காரை ஏற்றிய ராகவகிருஷ்ணன் என்பவரை சிறைக்கு அனுப்ப போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பந்தையத்திற்கு பயன்படுத்திய 10 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல்நிலைய வாசலில் நிறுத்தப்பட்டுள்ளன.