சென்னை ஐபிஎல் போட்டியில் போலீசை தாக்கியதாக நாம் தமிழர் கட்சியின் மதன் கைது
சென்னையில் ஐபிஎல் போராட்டத்தின்போது போலீஸை தாக்கியதாக நாம் தமிழர் கட்சியின் மதன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை: சென்னை ஐபிஎல் போராட்டத்தின்போது போலீஸை தாக்கியதாக நாம் தமிழர் கட்சியின் மதன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்ளும் வகையில் திட்டம் ஒன்றை அமைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. இதற்கு தமிழகமே கண்டனம் தெரிவித்தது.
மேலும் காவிரிக்கான போராட்டங்களை முன்னெடுக்கும் போது ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக் கூடாது என்று கோரிக்கை விடுத்தன. இதை ஐபிஎல் நிர்வாகம் மறுத்துவிட்டது.
இதையடுத்து சென்னையில் ஏப்ரல் 10-ஆம் தேதி நடந்த போட்டியின்போது சென்னை அண்ணா சாலை முழுவதும் நாம் தமிழர் கட்சியினர், தமிழக வாழ்வுரிமை கட்சியினர், பாரதிராஜா உள்ளிட்ட இயக்குநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போட்டி நடைபெற்ற மைதானத்துக்குள் நுழைய முற்பட்ட போராட்டக்காரர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதன் உள்ளிட்டோர் போலீஸாரை கடுமையாக தாக்கிய சம்பவம் அடங்கிய வீடியோ வெளியானது.
இதையடுத்து சீமான் உள்பட அக்கட்சியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த மதனை போலீஸார் இன்று கைது செய்தனர்.