வானத்தையே மூடி மறைச்ச பட்டாசு புகை.... சென்னையில் விமானங்கள், ரயில்கள் தாமதம்!
சென்னையில் தீபாவளிக் கொண்டாட்டத்தையொட்டி வெடித்துத் தள்ளிய பட்டாசு புகை காரணமாக ஏற்பட்ட மாசால் விமானங்கள், ரயில்கள் தாமதமாகின.
சென்னை : தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது வெடித்து தள்ளப்பட்ட பட்டாசின் புகை சென்னையின் வான்பரப்பை கருமேகம் போல சூழ்ந்தது. இதனால் விமானங்கள் மற்றும் ரயில்கள் தாமதமாகின.
சென்னையில் இந்த ஆண்டு தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது மக்கள் வெடித்துத் தள்ளிய பட்டாசின் புகையால் தலைநகரில் இரண்டு மடங்கு முதல் 10 மடங்கு வரை மாசு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக நேற்று அதிகாலையில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பிற்பகல் வரையிலும் கரும்புகை மூட்டம் மறையாமல் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புகை இருந்ததால் சாலைகளிலும் வாகனங்கள் மெதுவாகவே இயக்கப்பட்டன.
இந்நிலையில் தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியம் நேற்று வெளியிட்ட ஆய்வறிக்கை முடிவில் சென்னையில் அதிகபட்சமாக சவுகார்பேட்டையில் மிக அதிக அளவில் காற்று மாசு ஏற்பட்டதாக தெரிவித்தது. தீபாவளி தினத்தன்று மட்டும் 387 முதல் 777 மைக்ரான் அளவிற்கு காற்றில் மாசு ஏற்பட்டுள்ளது. காற்றில் அனுமதிக்கப்பட்ட 100 மைக்ரான் அளவிற்கு மாசு இருந்தால் மட்டுமே எந்த பாதிப்பும் ஏற்படாது, ஆனால் இது பல நூறுகளைத் தாண்டியுள்ளது.
காற்றல் அதிக மாசு
இதே போன்று மாசு ஏற்படுத்தும் வாயுக்களான சல்பர் டைஆக்சைடு மற்றும் நைட்ரஜன் டைஆக்சைடு 80 மைக்ரான் அளவிற்கு தீபாவளி தினத்தன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒலி மாசானது தீபாவளிக்கு முந்தைய தினத்தில் 62 முதல் 71 டெலிபலாகவும், தீபாவளி தினத்தன்று 68 முதல் 80 டெசிபலாகவும் இருந்துள்ளது.
தலைநகர் புகை நகரானது
அனுமதிக்கப்பட்ட ஒலியின் அளவானது 45 முதல் 55 டெசிபல் என்ற அளவிலும், வணிக வளாகங்கள் உள்ள பகுதிகளில் 55 முதல் 65 டெசிபல் வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அல்லாமல் தனியார் மாசு கட்டுப்பாட்டு அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வில் தலைநகர் சென்னை இதுவரை இல்லாத அளவில் அதிக மாசு அடைந்துள்ளதாக கூறியுள்ளன.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி?
காற்று மாசு காரணமாக நிச்சயம் வயதானோர் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். எனவே காற்று மாசை கணக்கில் எடுத்து இனியும் பட்டாசு வெடிப்பது அவசியம் தானா என மக்கள் சிந்திக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆவர்வலர் நித்யானந்த் ஜெயராமன் கூறியுள்ளார்.
போகியை விட தீபாவளியன்று அதிக புகை
சென்னை விமான நிலையத்தில் கரும்புகை காரணமாக 23 விமானங்கள் தீபாவளி தினத்தன்று இரவு தாமதமாக புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போகி பண்டிகையில் போது கூட இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின் போது கரும்புகை சூழ்ந்ததால் வானிலை தெளிவானதாக இல்லாததால் விமானங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.