நான் நம்புகிறேன், நிச்சயம் இந்தியா உலகக் கோப்பையை வெல்லும்... சச்சின்!
சென்னை: உலககோப்பை கிரிக்கெட் போட்டி இந்திய அணிக்கு சவாலாக இருந்தாலும் இந்திய அணி சவால்களை எதிர்கொள்ளும் திறமைகளுடன் உள்ளது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவாலும் பிரார்த்தனையாலும் இந்திய அணி உலககோப்பையை வெல்லும் என இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.
சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் லியோ முத்து உள் விளையாட்டு அரங்கு திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி தலைமை நிர்வாக அதிகாரி சாய்பிரகாஷ் லியோமுத்து தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாகிகள் கலைச்செல்வி லியோமுத்து, ஷர்மிளா ராஜா, ரேவதி சாய்பிரகாஷ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.
விளையாட்டு அரங்கு திறப்புவிழா:
விளையாட்டு அரங்கை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் திறந்து வைத்தார். முன்னதாக டெண்டுல்கருக்கு ரசிகர்களும் மாணவ, மாணவிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை ரசிகர்கள்:
நிகழ்ச்சியில் பேசிய சச்சின் "சென்னை ரசிகர்கள் எனக்கு என்றைக்குமே உற்சாக வரவேற்பு அளிப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய மைதானங்களில் சென்னையில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
உற்சாக ஆதரவு:
கடந்த 2008 இல் சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 387 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக எட்டி சாதனை படைத்ததற்கு சென்னை ரசிகர்களின் உற்சாக ஆதரவே முக்கிய காரணமாகும்.
இந்தியா வெற்றி அடையும்:
ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள உலககோப்பை கிரிக்கெட் போட்டி இந்திய அணிக்கு சவாலான ஒன்றாகும். இருந்தபோதிலும் இந்த சவாலை சந்திக்கும் திறமை இந்திய அணிக்கு உள்ளது. இந்திய ரசிகர்களின் ஆதரவாலும் பிரார்த்தனையாலும் இந்திய அணி இந்த சவாலில் வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.
பிடித்த வீரர்கள்:
அதன் பின்னர் மாணவ-மாணவிகளுடன் உரையாடிய சச்சின் கூறும்போது, கிரிக்கெட்டில் ஹீரோக்கள் கவாஸ்கரும், விவியன் ரிச்சர்ட்சும் பிடிக்கும் என்று கூறினார்.
ஓய்வு தந்த மகிழ்ச்சி:
ஓய்வு பெற்ற பிறகு குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் பொழுது போக்க நேரம் கிடைப்பதாகவும், தான் நினைக்கும் இடங்களுக்கு சென்று வர முடிவதாகவும், குழந்தைகளின் பிறந்தநாள் விழாக்களிலும், பள்ளி ஆண்டு விழாவிலும் கலந்து கொள்ள முடிவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடின உழைப்பும், கடவுள் நம்பிக்கையும்:
‘‘கிரிக்கெட் தவிர மோட்டார் ரேஸ், டென்னிஸ், பேட்மிண்டன், ஆக்கி உள்பட அனைத்து விளையாட்டுகளும் எனக்கு பிடிக்கும்'' என்ற சச்சின், ‘‘மாணவ, மாணவிகள் தோல்விகளை பற்றி கவலைப்படாமல் கடின உழைப்பு, கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்'' என்றார்.