சென்னை நகரம் கொலைநகரமாக மாறியுள்ளது... பெண்களுக்கு பாதுகாப்பில்லை - ஸ்டாலின்
சென்னை: சென்னையில் வீதியில் செல்லும் பெண்களுக்கு மட்டுமல்ல வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக திமுக பொருளாளரும் எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக தலைநகரம் கொலைநகரமாக மாறியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னையில் கொலை சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதாக அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மரணமடைந்த சுவாதியின் வீட்டிற்கு சென்று பாஜகவின் ஹெச் ராஜா நேற்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்த நிலையில் இன்று சுவாதியின் குடும்பத்தாரை, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் சூளைமேட்டில் உள்ள அவர்களது இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2013ல் பெண்களுக்குரிய பாதுகாப்பு சட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். அது செயல்படுகிறதா என்று சந்தேகமாக இருப்பதாக கூறினார். இதுபோன்ற கொடுமை மீண்டும் நடக்கக் கூடாது என்று சுவாதியின் தந்தை தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.
கூலிப்படை அட்டகாசம்
சட்டசபையில் உரையாற்றியபோது கூலிப்படை அட்டகாசம் குறித்து பேசினேன். ஐஜி தலைமையிலான குழு என்ன செய்கிறது என்று கேட்டேன். அதற்கு தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று முதல்வரே கூறினார். முதல்வர் கூறிய பதில் வேதனைக்குரியது என்று தெரிவித்தார்.
தொடர் கொலைகள்
கடந்த மே மாதம் முதல்வர் ஜெயலலிதா பதவியேற்ற நாளில் எழும்பூரில் மருத்துவர் ஒருவர் நகை பணத்திற்காக வெட்டி கொல்லப்பட்டார். கடந்த ஜூன் 5ம் தேதி சூளைமேட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் முருகன் கொல்லப்பட்டார்.
வெட்டிக்கொலை
ஜூன் 7ம் தேதி ஆர்டிஐ செயல்பாட்டாளர் பரஸ்மால் ஜெயின் சூளை அருகில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஜூன் 14ல், குரோம்பேட்டையைச் சேர்ந்த கிருஷ்ணவேணி கொல்லப் பட்டார். ஜூன்16ல் புழல் காவாங்கரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அகில்நாத், 36 பட்டப்பகலில் கொல்லப்பட்டார். ஜூன் 19ல் நகைக்காக பூந்தமல்லி பகுதியில் தேன்மொழி, அவரது மகள் கொல்லப்பட்டனர்.
வக்கீல்கள் கொலை
ஜூன் 22ல் விசாயர்பாடி மெகசின்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ரவி, 42 பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப் பட்டார். 23ம் தேதி முகப்பேரைச் சேர்ந்த ஜோதி பிரபாவை அவரது மகன் சத்தியகுமார் கிணற்றில் தூக்கி போட்டதில் இறந்தார்.
பெண்கள் கொலை
ராயப்பேட்டையில் பூட்டிய வீட்டில் தாய் மற்றும் 3 மகள்கள் என 4 பேர் பிணமாக கிடந்தனர். வெள்ளிக்கிழமையன்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி,24 கொடூரமாக கொல்லப்பட்டார்.
கொலை நகரம்
தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டி, பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த வேண்டும். வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் உள்பட அனைவரும் பீதியும் உறைந்துள்ளனர். தமிழக தலைநகரமான சென்னை கொலை நகரமாக மாறி வருகிறது என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
கொலைகள் பட்டியல்
சென்னை காவல்துறைக்கும் , ரயில்வே காவல்துறைக்கும் விடப்பட்ட சவால் இது, இது சென்னை காவல்துறையினருக்கு அழிக்க முடியாக கறையாக படிந்து விட்டது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொலைகளைப் பட்டியலிட்டு திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்ட நிலையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று சுவாதி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.