ஏமண்டி, இதைக் கேளண்டி.. 'சென்னை' தமிழ் காதாம்.. தெலுங்கு வார்த்தையாம்!
சென்னை: மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை அண்ணா தமிழ்நாடு என்று அழகாக மாற்றினார். பின்னர், மெட்ராஸ் என்ற ஆங்கிலப் பெயரை மாற்றி சென்னை என்று மாற்றியமைத்தார்கள்.. ஆனால் என்ன விசேஷம் என்றால் சென்னை என்பது தமிழ்ச் சொல்லே கிடையாதாம்.. சுத்தமான தெலுங்குச் சொல் என்கிறார் பிரான்ஸின் பாரீஸைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஜி.பி.பி. மோர்.
பல ஊர்களின் பெயர்களை ஆய்வு செய்துள்ள இவர் சென்னை என்றால் என்ன என்று ஆய்வு செய்யப் போய் அது ஒரு தெலுங்கு வார்த்தை என்று கண்டுபிடித்துள்ளாராம்.
கேட்டதுமே நெஞ்சை அடைப்பது போல இருக்கா.. தொடர்ந்து படிச்சுப் பாருங்க. ரொம்பவே டென்ஷனாயிடுவீங்க...
மெட்ராஸ்...பிறப்பும் அடித்தளமும்
'Origin and Foundation of Madras' இதுதான் மோர் எழுதியுள்ள புதிய ஆய்வு நூல். இதில்தான் இப்படிச் சொல்லியுள்ளார் அவர்.
தமிழைஸ்டு தெலுங்கு சாரே...
இவர் சொல்வது என்னவென்றால்.. அந்தக் காலத்தில் மெட்ராஸை, சென்னபட்டனம் மற்றும் சின்னப்பட்டனம் என்று இங்கு வசித்து வந்த தமிழர்களும், தெலுங்கர்களும் அழைத்து வந்துள்ளனர். ஆனால் சென்னபட்டனம் என்பது சென்னை என்று தமிழுக்கு மருவியுள்ளது. உண்மையில் சென்னை என்பதற்கு தமிழில் அர்த்தமே இல்லை. சந்தேகமே இல்லாமல் இது தெலுங்கு வார்த்தைதான்.
மேடு ராச பட்டனம்
மோர் மேலும் கூறுகையில், மேடு ராச பட்டனம் என்ற வார்த்தைதான் மெட்ராஸ்பட்டினமாக மருவியது. அப்போது இப்பகுதியில் வசித்து வந்த வெங்கடப்பா நாயக்கரிடமிருந்து ஆங்கிலேயர்கள் 1639ம் ஆண்டு தற்போது புனித ஜார்ஜ் கோட்டை உள்ள பகுதியை ஒரு விலை கொடுத்து வாங்கினர். அப்போது இந்தப் பகுதியை மெட்ராஸ்பட்டனம் என்றுதான் அழைத்துள்ளனர்.
1640களில் பெயர் மாறியது
ஆனால் 1640களில் மெட்ராஸ் பட்டனத்திற்கு இரு வேறு பெயர்கள் உருவாகியுள்ளன. அதாவது தமிழர்கள் சின்னப்பட்டனம் என்றும், தெலுங்கர்கள் சென்னப்பட்டனம் என்றும் இதை அழைக்க ஆரம்பித்தனர்.
ஆனால் முதலில் வந்தது சின்னதான்..!
ஆனால் மெட்ராஸ் பட்டனம் என்பது மாறியபோது தமிழர்கள் அழைத்த சின்னபட்டனம் என்ற சொல்தான் முதலில் வந்துள்ளது. பின்னர்தான் தெலுங்கர்கள் சென்னபட்டனம் என்று அழைக்கலாயினர்.
சென்ன என்றால் என்ன...?
சென்ன என்றால் தெலுங்கில் அழகான என்று அர்த்தம். சென்ன என்ற வார்த்தை தமிழில் இல்லை. அதற்கு அர்த்தமும் இல்லை. தமிழர்கள் அழைத்த சின்ன என்பதற்கு சிறிய என்று அர்த்தம் உள்ளது அனைவருக்கும் தெரியும்.
'Chennai' இல்லை 'Cennai' இருக்கு...
அதேசமயம், தமிழ் அகராதியில், 'Cennai' என்ற வார்த்தைக்கு அர்த்தம் உள்ளது. அதாவது சாமி ஊர்வலத்தின்போது முழங்கப்படும் வாத்தியக் கருவி என்று அதற்கு அர்த்தமாம். ஒரு வேளை ஷெனாயாக அது இருக்குமா என்று தெரியவில்லை.
இலக்கியத்தில் சென்னை இல்லையே
அதேசமயம் தமிழ் இலக்கியம் எதிலும் சென்னை என்ற வார்த்தை எங்குமே இல்லை. மேலும் Cennai என்ற வாத்தியம் குறித்தும் எங்கும் குறிப்பும் இல்லை.
பேரி திம்மன்னா சொல்வது என்னவன்றால்...
பேரி திம்மன்னா என்பவர் எழுதிய ஒரு ஆவணத்தில் சென்ன என்பது சென்னை என்று எழுதப்பட்டுள்ளது. அதேபோல சென்னகேசவ பெருமாள் சென்னை கேசவ பெருமாள் என்றும், சென்னபட்டனம் என்பது சென்னைப்பட்டனம் என்றும் மாறியிருக்கிறது.
டிரான்ஸ்லேஷன் தப்பப்பா...!!!
அனேகமாக இது 19வது நூற்றாண்டில் ஒரு மொழிபெயர்ப்பாளர் செய்த தவறால் வந்ததாக இருக்க வேண்டும். அவர்தான் சென்ன என்பதை சென்னை எனறு தவறாக மாற்றியிருக்க வேண்டும் என்று சொல்லி முடித்துள்ளார் மோர்..
தமிழறிஞர்களே விளக்கம் தாருங்கள்.. தமிழர்களுக்கு!.