துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சென்னையில் ஐடி ஊழியர்கள் மனிதசங்கிலி போராட்டம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராக சென்னையில் ஐடி ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்தும் சென்னையில் ஐடி ஊழியர்கள் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு மாசை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை கண்டித்து அப்பகுதி மக்கள் 100 நாட்களாக போராட்டம் நடத்தினர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை 100-ஆவது நாளையொட்டி ஆட்சியரிடம் மனு கொடுக்க பேரணியாக புறப்பட்டனர்.
அப்போது அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் பேரணி செல்ல கூடாது என்று போலீஸார் தடுத்து நிறுத்தினர். எனினும் இதையும் மீறி அவர்கள் பேரணியாக ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றனர். அப்போது போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
100-க்கும் மேற்பட்டோர் காயம்
இந்த சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதனால் இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. தமிழகம் முழுவதும் துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
ஆலையை மூடக் கோரி
இந்நிலையில் சிறுச்சேரி சிப்காட் வளாகத்தில் இன்று மாலை ஐடி ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸார் துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் போராட்டம் நடத்தினர்.
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தமிழக அரசு அரசாணை பிறப்பித்ததை அடுத்து அந்த ஆலைக்கு தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி சீல் வைத்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
துப்பாக்கிச் சூடு
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு மக்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்றிருந்தாலும் துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.