ஆர்.கே.நகர் 89 கோடி பணப்பட்டுவாடா.. விஜயபாஸ்கர் மனைவிக்கு ஐடி அதிகாரிகள் சம்மன்
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவிற்கு ஐடி அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
சென்னை: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறை கடந்த மாதம் சோதனை நடத்தியது.
சென்னை எழும்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் மயிலாப்பூரில் உள்ள அவரது உறவினர்கள் வீடு என சுமார் 30 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை செய்தனர்.
இதுதவிர புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினார்.
89 கோடி
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்வதாக எழுந்த புகாரை அடுத்து சோதனை நடந்ததாகவும், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ரூ.5.13 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறையினர் அறிவித்தனர். மேலும், 89 கோடி ரூபாய் ஆர்.கே. நகரில் பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் ஐடி துறையினர் தெரிவித்தனர்.
தந்தை விசாரணை
ஐடி துறையினர் கைப்பற்றிய ஆவணங்கள் தொடர்பாக விசாரிக்க அமைச்சரின் தந்தை சின்னதம்பிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் ஐடி அலுவலகத்தில் ஆஜரானார். அங்கு அவரிடம் சொத்து ஆவணங்கள் குறித்து விசாரிக்கப்பட்டது.
சகோதரர்
இதனைத் தொடர்ந்து, விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமாரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஐடி அதிகாரிகள் சம்மன் அனுப்பினார்கள். அவரும் திருச்சியில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்திற்கு நேரில் ஆஜராகி கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.
மனைவிக்கு சம்மன்
இந்நிலையில், இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவி ரம்யாவிற்கு ஐடி அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். இதில் நேரில் ஆஜராகி சொத்துக்கள் குறித்த கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.