ஐடி ஊழியர்கள் நாளை லீவு போட்டு போராட்டம்.. அமெரிக்க நிறுவனங்கள் அடி வாங்கும்!
சென்னை ஐடி ஊழியர்கள் நாளை மொத்தமாக லீவு போட்டு விட்டு போராட்டத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒவ்வொரு தரப்பும் தத்தமது பங்குக்கு போராட்டக் களத்தில் கலந்து கொண்டு தன்னெழுச்சி புரட்சிப் போராட்டத்திற்கு வலு சேர்த்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் நாளை விடுமுறை போட்டு விட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர். தரமணி, சோழிங்கநல்லூர், நந்தம்பாக்கம், சிறுசேரி சிப்காட் வளாகம் என அனைத்துப் பகுதிகளிலும் ஐடி நிறுவன ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாளை ஒரு நாள் மொத்தமாக விடுமுறை போட்டு விட்டு போராட்டத்தில் முழுமையாக குதிக்க ஐடி நிறுவன ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். மொத்தமாக விடுமுறை போட்டு விட்டு போராட்டத்தில் குதிக்கவுள்ளதால், ஐடி நிறுவனங்களில் பணிகள் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்களின் அவுட்சோர்சிங் பணிகள் அடி வாங்கும் என்று எதிபார்க்கப்படுகிறது.