கொட்டிய மழையிலும் ஸ்கேட்டிங்- உலக சாதனை படைத்த சென்னை குழந்தைகள்
சென்னை: 5 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்த போதும் நிர்ணயிக்கப்பட்ட தூரத்தையும் தாண்டி ஸ்கேட்டிங்கில் உலக சாதனை படைத்துள்ளனர் சென்னையைச் சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள்.
சென்னையில் 4 வயது முதல் 16 வயது வரை உள்ள சிறுவர் மற்றும் சிறுமிகள் 100 பேர் பங்கேற்பில் 100 மணி நேர நான் ஸ்டாப் ஸ்கேட்டிங்கில் 2,014 கிலோ மீட்டர் தூரம் கடக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டது.
இதற்கான பயிற்சிகள் கோச்சர் உன்னிகிருஷ்ணன் தலைமையில் அளிக்கப்பட்டிருந்தன.
ஸ்கேட்டிங் குழந்தைகள்:
திட்டமிட்டப்படி சென்னை அண்ணாநகர் ரோலிங் ஸ்கேட்டிங் கிளப்பில், கடந்த மே 1ஆம் தேதி காலை 9.27 மணிக்கு 4 வயது முதல் 16 வயது வரை உள்ள சிறுவர் மற்றும் சிறுமிகள் 100 பேரும், ஸ்கேட்டிங்கை தொடங்கினர்.
எதிர்பாராத மழை:
ஸ்கேட்டிங்கில் பங்கேற்ற குழந்தைகளின் பெற்றோர்கள் அவர்களை கைதட்டி ஆரவாரப்படுத்தி உற்சாகம் அளித்துக்கொண்டே இருந்தனர். இதனிடையே 5 ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் யாரும் எதிர்பாராத விதமாக மழை பெய்தது.
உற்சாகமான குழந்தைகள்:
அந்த மழை, காலை 9 மணி வரை தொடர்ந்தது. இருப்பினும் பெற்றோர்கள், பார்வையாளர்கள் அளித்த உற்சாகத்தில் ஸ்கேட்டிங்கில் பங்கேற்ற குழந்தைகள் அனைவரும் மழையில் நனைந்ததை உற்சாக பானமாக எடுத்துக்கொண்டு, ஸ்கேட்டிங்கை மேலும் வேகமாக தொடர்ந்தனர்.
அதிக தூரம் கடந்த குழந்தைகள்:
நிர்ணயிக்கப்பட்ட 100 மணி நேரத்திற்கான கால அளவு 5ஆம் தேதி மதியம் 1.27 மணிக்கு நிறைவடைந்தது. அப்போது அனைவரும் ஆச்சரியப்பட்ட விஷயம் என்னவென்றால், 100 மணி நேர நான் ஸ்டாப் ஸ்கேட்டிங்கில் 2,014 கி.மீ. தூரம் கடக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டதை தாண்டி, 2,616 கி.மீ. அவர்கள் கடந்துள்ளனர். அதாவது 612 கிலோ மீட்டர் கூடுதலாக கடந்துள்ளனர். அதாவது, 37,370 ரவுண்டுகள் கடந்துள்ளனர்.
முதல் பரிசு:
இந்த போட்டியில் சென்னை எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படிக்கும் பி.கோவிந்தராஜன் மகன் பி.ஜி.நிஷாந்த்தும் பங்கேற்றார். போட்டியில் முதலாவதாக வந்த பி.ஜி.நிஷாந்த் போட்டி முடிந்ததும் மிகுந்த மகிழ்ச்சியில் தனது தந்தையுடன் மேடையேறி பரிசு வாங்கினார்.
சென்னை குழந்தைகளின் சாதனை:
பி.கோவிந்தராஜன் கூறுகையில், கடைசியாக கர்நாடகாவில் ஸ்கேட்டிங்கில் 1,572 கிலோ மீட்டர் கடந்துள்ளனர். அதைவிட 1,044 கிலோ மீட்டர் கடந்து சாதனை புரிந்துள்ளனர் நம் சென்னை குழந்தைகள். மேலும், தமிழ்நாடு புக் ஆப் ரெக்கார்ட், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட், ஏசியா புக் ஆப் ரெக்கார்ட் என இந்த குழந்தைகளின் சாதனை பாராட்டும் வகையில் அமைந்துள்ளது என்றார் பெருமையாக.