விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு - ஏப்ரல் 25-ல் தமிழகம் முழுவதும் கடைகள் மூடல்!
விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்கும் விதமாக ஏப்ரல் 25-ந் தேதியன்று தமிழகம் முழுவதும் கடைகள் மூடப்படுகின்றன.
சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி வரும் 25-ந் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக தொழிற்சங்கங்கள், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் ஏப்ரல் 25-ந் தேதி போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதே போன்று அன்றைய தினம் முழுஅடைப்புக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. முழுஅடைப்பிற்கு ஆதரவளிப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் விக்ரமராஜா அறிவித்துள்ளார்.
இதே போன்று சென்னை கோயம்பேடு வியாபாரிகள் சங்கமும் முழு அடைப்பிற்கு அதரவு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 24ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 25ம் தேதி நள்ளிரவு 25ம் தேதி வரை கடைகள் இயங்காது என்று சங்கத் தலைவர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
கடையடைப்பு காரணமாக 30 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றாலும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்பதற்காக போராட்டத்தில் பங்கேற்பதாக செல்வராஜ் கூறியுள்ளார்.