மன நலம் பாதித்த பெண்களுக்கு இலவச நாப்கின்.. நல்லா இருங்க முத்துலட்சுமி!
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்கப்படுகிறது.
Recommended Video
சென்னை: பீரியட்ஸ், தீட்டு, விலக்கு, தூரம்.. இதுபோன்ற வார்த்தைகளை வெட்கம், தயக்கம் காரணமாக பேசுவோர் எண்ணிக்கை குறைந்து இருந்தது. அப்படியே பேசிவிட்டாலும் அவர் மீது ஒரு குற்றவாளிபோல பார்வை வீசப்படும். சாஸ்திரம், வீட்டுக்கு ஆகாது போன்ற காரணங்களால் 3 முதல் 5 நாட்களுக்கு ஒரு பாவமும் அறியாத கைதி போல தனிமைப்பட்டனர் அன்றைய பெண்கள்.
எனினும், மாதவிலக்கு என்றாலே, முப்பாட்டிகள் தொடங்கி, நமது அம்மாக்கள் வரை அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் வீட்டில் உபயோகமற்று கிழிந்த கிடந்த துணிகளே. என்றாலும் அதனை அவ்வளவு சுத்தமாக துவைத்து உலர்த்தி பயன்படுத்தி சுகாதாரத்துடன் வாழ்நாளை கழித்தனர். காலம் மெல்ல மெல்ல மாற தொடங்கியது. மாதவிடாய் காலங்களில் துணி உபயோகப்படுத்தினால் அது பட்டிக்காட்டுத்தனம் என்றும், நாப்கின்கள் பயன்படுத்துவது நவீனத்தனம் என்றும் கலர் கலரான விளம்பரங்கள் இளம் யுவதிகளின் மனதை கட்டி போட்டு இழுத்தது.
அனைவரும் அதன் பின்னாலேயே ஓடி தொடங்கியாயிற்று. ஆனால் விளைவு? இயற்கையின் முன் எதுவுமே நிலைக்காது என்பதும், செயற்கை முறையில் தயாராகும் எதுவானாலும் அது காலத்தாலேயே என்றேனும் ஒருநாள் திருப்பி அடிக்கப்பட்டுவிடும் என்பதும் நிரூபணமாகி வருகிறது. ஆம்... நாம் பயன்படுத்தும் நாப்கின்களில் பிளாஸ்டிக் கலந்துள்ளது. இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய், ஹார்மோன் குறைபாடு, உள்ளிட்டவற்றை ஏற்படுத்துகிறது. அது மட்டுமா? உபயோகித்து தூக்கி போடும் இந்த நாப்கின்கள் மண்ணில் புதைந்து மட்காமல் நின்று கொண்டுள்ளது. சும்மா நின்றால் பரவாயில்லையே... மண்ணின் சுவாசத்தையும் தடை செய்து கொண்டு முட்டுக்கட்டையல்லவா போட்டு கொண்டு நிற்கிறது. இதனால் மழை நீரானது பூமியினுள் உறிஞ்சப்படுவதும் தடுக்கப்பட்டு.. நிலத்தடி நீரும் குறைந்தும்தானே வருகிறது.
இந்நிலையில், கெமிக்கல் கலந்த நாப்கின்கள் பற்றி எடுத்து கூறி, பெண்களின் பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும், தைரியத்தையும் உயர்த்தி பிடிக்க முன் வந்திருக்கிறாராம் சென்னையை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர். அதுமட்டுமல்லாமல் இவர், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவசமாக நாப்கின்களை வழங்கி வருகிறார் என்ற புதுத்தகவலை என கேள்விப்பட்டு அவரிடமே சில கேள்விகளை முன்வைத்தோம். அவை உங்களுக்காகவும்.
கேள்வி: கண்ணெதிரே உயிருக்கு போராடி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரிய யோசிக்கும் இந்த காலத்தில், தேடி போய் நீங்க உதவி செய்யணும்னு எப்படி தோணுச்சு? குறிப்பாக நாப்கின்களை? அதுவும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு?
பதில்: அதுக்கு காரணம் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம்தாங்க. ஒருநாள் நாள் எங்க ஆஃபிஸ்-ல வேலை பாத்துட்டு இருந்தேன். நான் எதிர்பார்க்கவே இல்லை, எனக்கு பீரியட்ஸ் ஆயிடும்னு. கொஞ்ச நேரத்துல பார்த்தா, என்னோட சேர் டிரஸ் எல்லாம் bleeding ஆகிடுச்சு, நான் பாத்ரூம் போய்ட்டு சரி செஞ்சுட்டு வந்து உட்கார்ந்தேன், மறுபடியும் அதே பிரச்சினை. அதை சமாளிச்சு வீட்டுக்கு கௌம்புறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுச்சு, வீட்டுக்கு வந்துட்டே இருக்கும்போது திடீர்னு ஒரு மனநல காப்பகம் என் கண்ணுல பட்டது. அப்போதான் ஒரு யோசனை தோணுச்சு. நன்றாக சிந்திக்க வாழ்ந்து கொண்டிருக்கும் நாமே பீரியட்ஸ் ஆயிட்டா இந்த பாடு படுகிறோமே,,, மனநல காப்பகத்திலுள்ள இளம் பெண்கள் எப்படியெல்லாம் அதை எதிர்கொள்வார்கள் என்று. நாப்கின்கள் அவர்களுக்கு பயன்படுத்த தெரியுமா? சரியாகத்தான் பயன்டுத்துவார்களா? இதெல்லாம் யோசிச்சு பார்த்தேன். ஒரு நிமிஷம் கண்கலங்கி போய் நின்றுவிட்டேன். பிறகுதான் அவர்களுக்கு இலவசமாக நாப்கின்கள் கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன்.
கேள்வி: இப்போ மனநல காப்பகத்தில் உள்ள பெண்களுக்கு நாப்கின்கள் கொடுக்க ஆரம்பிச்சிட்டீங்களா?
பதில்: ஆமாம். ஆரம்பிச்சிட்டோம். கரூரில் ஒரு விழாவில் கலந்துக்க போயிருந்தேன். விழாவிலிருந்த இளையதலைமுறை நண்பர்களை சந்தித்து, என் விருப்பத்தையும், ஆதங்கத்தையும் சொன்னேன். அவங்களுக்கு என் கருத்து ரொம்ப வித்தியாசமாகவும், உபயோகமாகவும் இருந்ததா சொன்னாங்க. உடனே நாங்களும் எங்களால் ஆன உதவிகளை உங்களுக்கு செய்யறோம்னு அங்கேயே முன்வந்தாங்க. அதுமட்டும் இல்ல, முதல்கட்டமா 3 மன நல காப்பகத்துல இருக்கிற பெண்களை சந்திச்சு 3 மாசத்துக்கு தேவையான நாப்கினை இலவசமா தரப்போகிறோம்,
கேள்வி: எப்போ இருந்து உங்க பணியை தொடங்க போறீங்க?
பதில்: இல்லை.. இதுக்கு முன்னாடி தொடர் மழை பெய்தப்போ நரிக்குறவர் பெண்களுக்கு இதே மாறி நாப்கின் குடுத்துருக்கோம். என்னவோ நம்மால ஆன ஒரு உதவிங்க. ஆனா இன்னும் நெறைய செய்ய ஆசையாதான் இருக்கு. பாப்போம். நிதியும் நண்பர்களோட சப்போர்ட்டும் கிடைச்சா பெருசா பண்ணுவோம்.
கேள்வி: சரி.. நாப்கின்கள்லதான் பிளாஸ்டிக் கலந்து இருக்கு, சுகாதாரம், சுற்றுப்புற கேடு-ன்னெல்லாம் சொல்றாங்களே? நீங்க எப்படி அதை கொடுத்துட்டு வர்றீங்க?
பதில்: அங்கதான் நாங்க ஒரு புது விஷயத்தை கையிலெடுத்திருக்கோம். நாங்க குடுக்கற நாப்கின் பிளாஸ்டிக் கலப்படம் இல்லாதது. தைரியமாக யூஸ் பண்ணலாம். இது பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டது. அதனால எந்த பிரச்சனையும் வராது. அதனால பொண்ணுக்கு மட்டும் இல்லீங்க.. மண்ணுக்கும்தான். இருக்கற வரை குடுப்போமே...
இவ்வாறு முத்துலட்சுமி பதிலளித்தார்.
நாப்கின்கள், பீரியட்ஸ் பற்றியெல்லாம் தயக்கமின்றி பேசுவதும், கருத்துக்களை பரிமாறுவதும் தற்போதைய காலகட்டத்தில் இயல்பான விஷயமாக போய்விட்டது. இருந்தாலும் இன்றும் சில பெண்கள் நாப்கின்களை வாங்குவதற்கு மருந்து கடையிலோ, மளிகை கடையிலோ தயங்கி தயங்கி நின்று, யாருமில்லாத நேரம் பார்த்து மெதுவாக கடைக்காரரிடம் கேட்டு வாங்கி வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில், கெமிக்கல் கலந்த நாப்கின் குறித்த விழிப்புணர்வை ஒரு பெண் அளிப்பதுடன், அதை இலவசமாகவும் கொடுக்க முன் வந்திருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது. மனநலம் காப்பகம் என்றாலே நிதியுதவி, பழைய துணிகள், பிரபலங்களின் பிறந்தநாள் அன்று ஒரே ஒரு வேளை உணவு என்றுதான் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால் அங்குள்ள பெண்களுக்கு நாப்கின் கொடுக்க வேண்டும் என்று நினைத்து, அதை செயல்படுத்தி வரும் முத்துலட்சுமி, பெண் சமுதாயத்தின் கண் முன் உயர்ந்து நிற்கிறார். வாழ்த்துக்கள் முத்துலட்சுமி!