கையில் காசில்லாமல் தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி – காப்பாற்றிய நெல்லை போலீஸ்!
நெல்லை: நெல்லையில் தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடியை போலீசார் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையை அடுத்த மானூர் போலீஸ் ஏட்டு செந்தில்குமார் இன்று காலை அப்பகுதியில் வேப்பங்குளம் அருகே பைக்கில் சென்றார்.
அப்போது ஒரு காதல் ஜோடி ரோட்டில் தள்ளாடியபடி நடந்து வந்தனர். சந்தேகப்பட்ட ஏட்டு செந்தில்குமார் அவர்களிடம் விசாரித்தார்.
சென்னைக் காதலர்கள்:
அப்போது அவர்கள் தங்களுக்கு சென்னை என்றும், அங்குள்ள கல்லூரியில் படிப்பதாகவும் கூறினர். இருவரும் உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும், தங்கள் காதலுக்கு எதிர்ப்பு உள்ளதால் பல்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு இங்கு வந்ததாக கூறினர்.
தற்கொலைக்கு முடிவு:
மேலும் தாங்கள் தற்கொலை செய்யும் நோக்கத்தில் இந்த பகுதிக்கு வந்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை ஏட்டு செந்தில்குமார் மானூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது.
ஒரே கல்லூரியில் படிப்பு:
சென்னை வேளச்சேரி அருகே உள்ள சித்திரபாக்கத்தை சேர்ந்தவர் அறிவுஜோதி. இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பி.ஏ இறுதி ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் மகள் கவுரி. இவர் அறிவு ஜோதி படிக்கும் அதே கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
வீட்டிற்கு தெரியாத காதல்:
இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இருவரும் வேறு, வேறு பிரிவை சேர்ந்தவர்கள். எனினும் இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியாமல் இருந்தது.
திருமணம் செய்ய வற்புறுத்தல்:
இந்த நிலையில் கவுரிக்கு திருமண ஏற்பாடு நடந்ததாக தெரிகிறது. இதுபற்றி அவர் தனது காதலன் அறிவுஜோதியிடம் தெரிவித்தார். அறிவு ஜோதியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கவுரி அறிவுறுத்தினார். இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறினார்.
ஊரை விட்டுச் செல்லத் திட்டம்:
இதை தொடர்ந்து காதல் ஜோடி ஊரைவிட்டு செல்ல திட்டமிட்டது. கடந்த சில நாட்களுக்கு அவர்கள் சென்னையில் இருந்து பெங்களூர் சென்றனர்.
அவிநாசியில் திருமணம்:
அவர்களிடம் மொத்தம் 1000 ரூபாய் மட்டுமே பணம் இருந்தது. அதை வைத்து அவர்கள் செலவு செய்தனர். பின்பு அங்கிருந்து கோவை வந்த அவர்கள் அவிநாசி சிவன் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டனர்.
ஆயிரம் ரூபாயும் செலவு:
பின்னர் அவர்கள் திருச்செந்தூர் சென்றனர். அங்கு சாமி கும்பிட்டுவிட்டு சாலை ஓரம் படுத்து தூங்கினார்கள். இதன்பிறகு அவர்கள் இன்று காலை நெல்லை வந்தனர். அவர்களிடம் இருந்த ஆயிரம் ரூபாயும் செலவானது.
சாப்பிடவும் வழியில்லா நிலை:
சாப்பிடவும் வழியில்லாமல் எங்கு செல்வது என தெரியாமல் தவித்தனர். வேறு வழியின்றி சேர்ந்தே தற்கொலை செய்வது என்ற எண்ணத்தில் அவர்கள் அங்கிருந்து வேப்பங்குளம் பகுதிக்கு நடந்தே சென்றனர்.
பெற்றோருக்கு விவரம்:
இந்த வேளையில் தான் ஏட்டு செந்தில்குமார் அவர்களை பார்த்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளார்.இந்த நிலையில் காதல் ஜோடி பிடிபட்ட விவரம் சென்னையில் உள்ள அவர்களது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பள்ளிக்கரணை போலீசாரிடம் காதல் ஜோடியை ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.