378வது பிறந்த தினம்.. சென்னை மாதம் விழா கொண்டாட்டம்
சென்னை: மாநில தொல்லியல் துறை மற்றும் சென்னை 2000 பிளஸ் அறக்கட்டளை இணைந்து சென்னை மாதம் விழாவைக் கொண்டாடி வருகிறது.
சென்னை நகரம் 1639, ஆகஸ்ட் 22ஆம் தேதி அன்று உருவானதாகக் கூறப்படுகிறது. அதாவது, 1639ம் ஆண்டுதான் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை ஆங்கிலேயர்கள் கட்டினார்கள். அதுதான் சென்னை நகரம் உருவாகக் காரணமாக அமைந்தது. எனவே, ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்தத் தினத்தை சென்னை மாதம் விழாவாகக் கொண்டாட சென்னை 2000 பிளஸ் அறக்கட்டளை, மாநில தொல்லியல் துறையோடு இணைந்து கொண்டாடுகிறது.
ஆகஸ்டு 21ம் தேதி தொடங்கிய இந்தச் சிறப்பு நிகழ்ச்சி 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியான இன்று, சென்னையில் வால்மீகி, ஆதி சங்கரர், சுந்தரர், பட்டினத்தார் ஆகிய தலைப்புகளில், பேராசிரியர்கள் ரங்கராஜ், ரவிச்சந்திரன், சிம்கம் சரவணன், ஹேமலதா, சங்கமித்திரை உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
நாளை பேராசிரியர்கள், என் மார்க்சிய காந்தி, சிம்கம் குமார் ஆகியோர் கோயம்பேடு, மாங்காடு, திருவேற்காடு மற்றும் பரங்கிமலை பற்றி காலை அமர்வில் சிறப்புரையாற்ற உள்ளனர். மேலும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் ராஜவேலு 650 ஆண்டு பழமை வாய்ந்த மதரசாபட்டினம் பற்றிய கல்வெட்டுகள் குறித்து உரையாற்ற உள்ளார்.