சென்னையில் கொடூரம்.. பெண் ஆசிட் வீசி கொலை.. 4 வயது குழந்தையின் தாய்!
சென்னையில் பணிக்கு சென்ற இடத்தில் செவிலியர் மீது ரத்தப் பரிசோதனை மைய உரிமையாளர் ஆசிட் வீசியதில் 5 நாள் சிகிச்சைக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்துள்ளார்.
Recommended Video
சென்னை: சென்னையில் ரத்த பரிசோதனை மையத்திற்கு பணிக்கு சென்ற செவிலியர் யமுனா மீது உரிமையாளர் ஆசிட் வீசியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து உரிமையாளர் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மடிப்பாக்கம் அருகே வாணுவம்பேட்டையில் ஸ்ரீ பாலாஜி ரத்தப் பரிசோதனை மையம் என்ற தனியார் ரத்தப் பரிசோதனை நிலையம் உள்ளது. இந்த ரத்தப் பரிசோதனை மையத்தில் 30 வயது யமுனா என்ற பெண் செவிலியராகப் பணியாற்றி வந்தார். கடந்த பிப்ரவரி 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று ரத்தப்பரிசோதனை மைய உரிமையாளர் ராஜா யமுனாவை பணிக்கு வருமாறு அழைத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக இருந்தாலும் யமுனா உரிமையாளரின் பேச்சை தட்டமுடியாமல் பணிக்கு வந்துள்ளார். பிற்பகல் 1 மணியளவில் ரத்த பரிசோதனை மையத்தில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
தீக்காயங்களுடன் துடித்த யமுனா
அப்போது யமுனா தீப்பற்றிய நிலையில் துடிதுடித்துக் கதறி கொண்டிருந்துள்ளார். 46 சதவீத தீக்காயங்களுடன் யமுனா சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஸ்பிரிட் வீசி தீ வைப்பு
இந்த சம்பவம் குறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ரத்தப் பரிசோதனை மையத்தில் உள்ள எரியும் நிலையில் உள்ள திரவத்தை ராஜா ஊற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து தீ வைத்து எரித்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கடந்த ஒரு வாரமாக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யமுனா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யமுனா உயிரிழந்ததையடுத்து ராஜா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரிதவிக்கும் 4 வயது பெண் குழந்தை
காதலித்து திருமணம் செய்த யமுனா, கணவர் மற்றும் 4 வயது பெண்குழந்தையுடன் வசித்து வந்தார். யமுனா உயிரிழந்ததால் அவரது 4 வயது மகளும் கணவரும் நிராதரவான நிலையில் மருத்துவமனையில் கண்ணீர் வடித்தபடி நின்றது மருத்துவமனை ஊழியர்களையே கலங்க வைத்தது.