வெள்ளத்தில் தவித்த மூதாட்டி… தூக்கிச் சென்று மீட்ட இளைஞர்: வைரல் வீடியோ
சென்னை: சென்னை தில்லைநகரில் வெள்ளம் சூழப்பட்ட பகுதியில் பேருந்தில் இருந்து இறங்க முடியாமல் தவித்த வயதான பெண்மணியை அடையாளம் தெரியாத ஒருவர், தூக்கிச் சென்று மீட்ட வீடியோ காட்சி, ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னையில் சனிக்கிழமையன்றும் ஞாயிற்றுக்கிழமையும் கனமழை கொட்டியது. இந்த மழையில் சென்னையின் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
Faith in humanity restored. When this stranger came from nowhere to help the old people from a bus stuck in the subway.#respect.
Posted by Venkat Krishnan on Sunday, November 1, 2015
நங்கநல்லூர், தில்லை கங்கா நகர் பாலத்துக்கு அடியில் தண்ணீர் நிரம்பி வழிந்தது. அப்போது, அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று நகர முடியாமல் பாலத்துக்கு அடியிலேயே நின்றுவிட்டது. காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்த பயணிகள் ஒவ்வொருவராக இறங்கி நடக்க ஆரம்பித்தனர். சிலரோ ஆட்டோவிலும், மற்ற பேருந்துகளிலும் செல்லத் தொடங்கினர்.
பலவீனமாக, நடக்கவே முடியாமல் இருந்த வயதான பெண்மணி என்ன செய்வது என்று புரியாமல் தவித்தார். முழங்கால் அளவு வெள்ளநீரில் எப்படி இறங்குவது என்று புரியாமல் அமர்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த நல்ல மனிதர் ஒருவர், அவரைத் தூக்கிச் சென்று மழைநீரைக் கடந்து சென்று தண்ணீர் இல்லாத பகுதியில் இறக்கிவிட்டார்.
இதனை பாலத்தின் மீதிருந்து ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்து வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். நல்ல மனிதர் ஒருவரின் மனிதாபிமானம் மிக்க அந்த செயலை சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோவை நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். பிடிச்சிருந்தா நீங்களும் ஒரு லைக் போடுங்களேன்.