ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை - சென்னையில் பூக்கள், பழங்கள், பொரி விற்பனை களைகட்டியது
ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் கடைகளில் பூக்கள், பொறி, பழங்களின் விற்பனை களைகட்டியுள்ளது.
சென்னை: நவராத்திரி பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகைகள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பூக்கள் பழங்கள் விற்பனை, பூஜை பொருட்களின் விற்பனை களைகட்டியுள்ளது.
நாளை ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தனியார், அரசு அலுவலகங்களில் இன்றே பூஜைகளுக்கான ஏற்பாடுகள் செய்யத் தொடங்கியுள்ளனர்.
இதையொட்டி சென்னையில் அவல், பொரி, கடலை, சர்க்கரை, பழங்கள், வாழை மரம், தோரணங்கள் மற்றும் இனிப்புகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இதனை வாங்குவதற்காக கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஆயுதபூஜை
உழைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் மக்கள் வருடத்திற்கு ஒருநாள் தாங்கள் செய்யும் தொழில் மற்றும் தொழிலுக்கு பயன்படுத்தும் கருவிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது.
சரஸ்வதி பூஜை
வீடுகள், சிறு கடைகள், பெரிய விற்பனை நிறுவனங்கள், கைத்தொழில் செய்யும் இடங்கள், பணிமனைகள், பெரிய தொழிற்சாலைகள், ஆலைகள், தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது.
தோரண அலங்காரங்கள்
ஆயுதபூஜையை முன்னிட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள் சுத்தம் செய்யப்படும். வாசலில் தோரணங்கள், வாழை மரங்களை கட்டி, அலுவலகத்தில் உள்ள சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து வைப்பர்.
பூஜை செய்து கொண்டாட்டம்
அவல், பொரி, கடலை, சுண்டல், சர்க்கரை பொங்கல், ஆப்பிள், ஆரஞ்சு, எலுமிச்சம் பழம், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை படைத்து, சாம்பிராணி, சூடம் காண்பித்து பூஜை செய்து இந்த வருடமும் தொழில்கள் மேலும் மேலும் வளர வேண்டும் என ஊழியர்களுடன் பிரார்த்தனை செய்வார்கள்.
கோயம்பேடு சந்தையில் விற்பனை
ஆயுதபூஜைக்கான பொருட்களை விற்பனை செய்யும் கோயம்பேடு மார்க்கெட் நேற்றும் இன்றும் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. மொத்த வியாபாரம் இங்கு நடைபெறுவதால் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறுவியாபாரிகள் திரண்டிருந்தனர்.
பூக்கள் விற்பனை படுஜோர்
ஏராளமோனோர் பூக்கள் பூஜை பொருட்களை வாங்குவதற்காக திரண்டனர். இதனால் கோயம்பேடு மார்க்கெட் வளாகம் களைக்கட்டியிருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம் காணப்பட்டது. பழக்கடை, பூக்கடை ஆகியவற்றிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
அதிகரித்த கூட்டம்
சென்னை நகரில் மயிலாப்பூர், தி.நகர், மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, வடபழனி, விருகம்பாக்கம், போரூர், திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர், கீழ்ப்பாக்கம், அயனாவரம், பெரம்பூர், அண்ணாநகர், பாரிமுனை ஆகிய இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகாரித்துள்ளது.