கொடையும், தயையும் பிறவி குணமாய் கொண்ட புரட்சித் தலைவி.... சென்னை மேயரின் 'புரட்சி' தீர்மானம்!
சென்னை: தர்மத்தின் வழி நடக்கும் புரட்சித் தலைவியை தர்மம் தலைகாக்கும். இது நிச்சயம். தர்மத்தின் துணையோடு அவர் மீண்டும் முதல்வராய் அரியணை ஏறி நம்மை வழி நடத்துவார். இது சத்தியம் என்று சென்னை மாநகராட்சியில் சிறப்பு தீர்மானம் போட்டுள்ளார் மேயர் சைதை துரைசாமி.
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி சிறப்பு தீர்மானம் ஒன்றை வாசித்தார்.
கொடையும், தயையும் பிறவி குணமாய் புரட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கு அமைந்துள்ளது. பதவியில் இருந்தாலும், இல்லா விட்டாலும் ஏழை மக்களுக்கு உதவி செய்வது அவர் ரத்தத்தில் கலந்திருக்கும் குணநலம். ஆட்சியில் இருக்கும்போதும் சரி, அதிகாரம் கையில் இல்லாத போதும் சரி, கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி மக்களுக்கு உதவிகள் செய்யக்கூடியவர்.
இந்திய திருநாட்டை போர்மேகம் சூழ்ந்து விட்டது. இதனை எதிர்கொள்ள நிதி வழங்குங்கள் என்று பிரதமர் கேட்ட நொடியே தான் அணிந்திருந்த தங்க நகைகள் அத்தனையையும் தயக்கம் சிறிதும் இன்றி அந்த நிமிடமே ஜெயலலிதா வழங்கினார். ஏழை-எளிய மக்களின் வாட்டத்தை போக்கி ஏற்றத்தை தந்திட எண்ணில்லா திட்டங்களை தந்தார். மக்கள் நலம் காக்க மகத்தான திட்டங்களை அள்ளித்தந்த வள்ளல் அவர்.
மக்கள் நலன் ஒன்றையே சிந்தித்து வாழும் புரட்சித்தலைவியை மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் இட்டுக்கட்டிய புனைந்துரைகள் வீழ்த்தி விடாது. தர்மம் செய்து வாழ்ந்தவர்கள் வீழ்ந்ததாய் சரித்திரம் இல்லை. கொடை கொடுத்து வாழ்ந்தவர்களை யாரும் வீழ்த்தியதாய் வரலாறும் இல்லை. தர்மத்தின் வழி நடக்கும் புரட்சித் தலைவியை தர்மம் தலைகாக்கும். இது நிச்சயம். தர்மத்தின் துணையோடு அவர் மீண்டும் முதல்வராய் அரியணை ஏறி நம்மை வழி நடத்துவார். இது சத்தியம் என்றார் கூறி அதிமுகவினரை புல்லரிக்கவைத்தார்.
சொர்ண ஜெயந்தி
அம்மாவை பாராட்டியாச்சு அடுத்து கொஞ்சம் மாநகராட்சி வேலைகளைப் பற்றியும் பேச வேண்டுமே என்று நினைத்த துரைசாமி, ஒருவழியாக அம்மா உணவகத்தை கையில் எடுத்தார். சொர்ண ஜெயந்தி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி 200 வார்டுகளில் உள்ள அம்மா உணவங்களில் 3800 பணியாளர்களும், துப்புரவு பணிக்கு 5650 பணியாளர்களும், மலேரியா தூர்வாரும் பணிக்கு 1148 பணியாளர்களும், மொத்தம் 10598 ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.295 வீதம் நேரடியாக அவர்கள் சார்ந்துள்ள குழுக்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.
துப்புறவு பணி
முன்பு தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் துப்புரவு பணி, மலேரியா தூர்வாரும் பணி நியமன முறையில் மாநகராட்சி வழங்கிய தொகை முழுவதுமாக போய் சேராமல் இடைத்தரகர்கள் லாபம் அடைந்தனர். அவர்களுக்கு ரூ.295க்கு பதிலாக ரூ.220, ரூ.230 என்ற அளவிலேயே கிடைத்தது.
நேரடியாக பணப்பட்டுவாடா
தற்போது இந்த முறை மாற்றப்பட்டு பணியாளர்களுக்கு நேரடியாகவே குழு தலைவர் மூலம் வழங்கப்படுகிறது. இதில் ஏதேனும் முறைகேடு நடப்பது தெரிய வந்தால் குழு தலைவரை நீக்குவதோடு அந்த குழுவையும் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தவறு செய்தால் நடவடிக்கை
எந்தெந்த இடங்களில் குழுக்கள் தவறு செய்கிறார்கள் என்பதை தெரிவிக்கலாம். எங்கு தவறு நடந்தாலும் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டக்கூடியவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இடைத்தரகர்களை தடுக்கவே இந்த சொர்ணஜெயந்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார் மேயர் சைதை துரைசாமி .