என் நிலைமையை புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்.. பதில் சொல்ல முடியாமல் நிருபரிடம் கெஞ்சிய சென்னை மேயர்!
சென்னை: வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கும்போதும், ஒரு வார்த்தை கூட அதுபற்றி தெரிவிக்க முடியாமல், மேயர் சைதை துரைசாமி நகர்ந்து ஓடுவது பார்க்கவே பரிதாபத்தை வரவழைப்பதாக உள்ளது.
கடந்த வாரம் சென்னையை புரட்டி போட்ட மழை மீண்டும், சென்னையில் வெளுத்து வாங்க ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் சில தினங்கள் முன்பு, வெள்ளசேதத்தை பார்வையிட சென்றார் மேயர் சைதை துரைசாமி. அவரை ஆங்கில தொலைக்காட்சி ஊடகமான டைம்ஸ்நவ் நிருபர் பேட்டியெடுக்க முற்பட்டார்.
பயந்து ஓட்டம்
ஆனால், மைக்கை பார்த்ததுமே, ஏதோ பாம்பை பார்த்த பச்சப்பிள்ளை போல பயந்து நடுங்கிவிட்டார் சைதை துரைசாமி. அவரது முகத்தில் அப்படியொரு சங்கட ரேகை ஓடியது. "சார்.. வெள்ள சேத தடுப்பு விவகாரத்தில், மாநகராட்சி தோல்வியடைந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே, அதுபற்றி ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்கள்" என அந்த நிருபர் தொடர்ந்து கேள்வி எழுப்பிக்கொண்டிருக்க, மேயரோ, அங்கிருந்து நழுவுவதையே குறிக்கோளாக கொண்டிருந்தார்.
நிலைமை சரியில்லங்க
ஒருகட்டத்தில், கேமராவைவிட்டு திரும்பி நின்றுகொண்டு, "ப்ளீஸ் என் 'நிலைமையை' புரிந்துகொள்ளுங்கள்" என்று கெஞ்சியேவிட்டார் சைதை துரைசாமி. ஆனால், நிருபரோ விடுவதாக இல்லை. ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்... என்கிற பாணியில் ஒத்த வார்த்தை சொல்லுங்க சார் என கேட்க, சைதை முகத்திலோ எள்ளும், கொள்ளும் வெடித்தது. கடைசிவரை மனிதன் எஸ்கேப் ஆவதையே வாழ்க்கை லட்சியமாக கொண்டவராக ஓடிக்கொண்டிருந்தார்.
வாய் பூட்டு
இறுதியில் அவரது நிலையை புரிந்துகொண்ட உதவியாளர் ஒருவர், "தொல்ல பண்ணாதப்பா.. உங்களால ஜனங்கள பாக்க முடியாம போயிரும்.." என சற்று எச்சரிக்கை கலந்த குரலில் கெஞ்சினார். இந்த வீடியோ தற்போது, சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. மேயரான, சைதை துரைசாமியை, வாயை திறக்க கூடாது என வாய்ப்பூட்டு போட்டது யார் என்பது இதில் தொக்கி நிற்கும் கேள்வி.
மேயர் இருட்டடிப்பு
சமீபத்தில் ஜெயலலிதா, ஆர்.கே.நகரில் வெள்ள சேதத்தை பார்வையிட சென்றபோதுகூட, "உங்களுக்காக மாநகராட்சி ஆணையரே நேரில் வந்துள்ளார்" என கூறினார். அப்போது மேயர் சைதை துரைசாமி, பின்னாடி பவ்யமாக நின்றுகொண்டிருந்தார். ஆணையருக்கே உத்தரவிடும் மேயரை, ஜெயலலிதா முன்னிருத்தவில்லை என்பது இதில் கவனிக்க வேண்டியது.
இதை இப்படியே மெயின்டைன் பண்றா சூனா பானா . courtesy : Timesnow
Posted by Timepass Online on Saturday, November 21, 2015
சென்னையின் சோதனை
இப்போது புரிந்திருக்குமே, "ப்ளீஸ் என் 'நிலைமையை' புரிந்துகொள்ளுங்கள்" என்று சைதை துரைசாமி கெஞ்சி கூத்தாடியது ஏன் என்று.. இருந்தாலும், வாயே திறக்காத ஒரு மேயர் சென்னைக்கு கிடைத்துள்ளதை என்னவென்று சொல்வது.