இறந்தும் துடிக்கப் போகும் இதயம் – சென்னையில் மீண்டும் ஒரு இதய மாற்று அறுவைசிகிச்சை
சென்னை: சென்னையில் மூளைச்சாவு அடைந்த ஆரணியைச் சேர்ந்த நெசவாளி ஒருவரின் இதயமானது, மற்றொரு நோயாளிக்கு பொருத்தப்படுகின்றது.
இதய தானம்... இதயமில்லாதவர்களையும் சிறிது நேரம் மனம்கசிய வைக்கும் உயிர்காக்கும் இந்த தானம் தற்போது பெருமளவில் மக்களிடையே பரவி உள்ளது.
அந்த வகையில் ஹிதேந்திரன், சபரீஷ், முரளி, லோகநாதனைத் தொடந்து இன்று ஆரணியைச் சேர்ந்த மோகன்ராஜின் இதயமும் மற்றொருவரின் உடலில் தனது துடிப்பினைத் தொடரப் போகின்றது.
நெசவாளியான மோகன்ராஜ்:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் கண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், நெசவுத் தொழிலாளி. இவருடைய மனைவி பூர்ணிமா, மகன்கள் கனீஷ்கர், மெய்யப்பன்.
வாகன விபத்து:
கடந்த 24 ஆம் தேதி அன்று தனது மோட்டார் சைக்கிளில் ஆரணி நோக்கி வந்து கொண்டிருந்தபோது எதிரில் வந்த மற்றொரு வாகனம் மோதி தலையில் பலத்த காயம் அடைந்தார் மோகன்ராஜ்.
தலையில் படுகாயம்:
அக்கம்பக்கத்தினர் பதறிப்போய் அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரின் உடல்நிலை மோசமான காரணத்தால் மேல்சிகிச்சைக்காக சென்னை, பெரும்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மூளைச்சாவடைந்த மோகன்ராஜ்:
இந்நிலையில் மோகன்ராஜ் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவெடுத்தனர்.
6 பேரை வாழவைப்பவர்:
இதனையடுத்து மூளைச்சாவு அடைந்த மோகன்ராஜின் இதயம், நுரையீரல், கண்கள், சிறுநீரகம் உள்பட 6 உறுப்புகள் தானத்திற்காக எடுக்கப்பட்டன. அவை காத்திருப்போர் பட்டியலில் உள்ள 6 பேருக்கு வழங்கப்படுகிறது.
வாழவைக்கும் இதயம்:
மோகன்ராஜின் இதயமானது இன்று காலை 8 மணியளவில் 14 நிமிடங்களில் பெரும்பாக்கம் மருத்துவமனையில் இருந்து அடையாறுக்கு கொண்டு செல்லப்பட்டு மற்றொரு பெண் இதய நோயாளி ஒருவருக்கு பொருத்தப்பட்டு வருகின்றது. மற்ற உறுப்புகளும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டு வருகின்றன.
தழைத்து ஓங்கட்டும் மனிதநேயம்:
மோகன்ராஜின் உடலுக்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது சொந்த ஊரில் இறுதி சடங்கு நடைபெற உள்ளது. துடிக்காமல் இருக்கும் இதயங்களுக்கு மத்தியில், இறந்தும் இதயத்துடிப்பை நிறுத்திக் கொள்ளாமல் மற்றவர்களை வாழவைக்கும் இவர்களால்தான் இன்னும் இங்கு மனிதம் வாழ்கின்றது.