அரபிக்கடலில் புயல்.. மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வானிலை மையம் அறிவுறுத்தல்!
தென் கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னை: தென் கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி, நாகை, கரூர், மதுரை, அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
இதனால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சென்னையிலும் நேற்று பகல் நேரத்தில் வெயில் கொளுத்திய நிலையில் காலையில் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
மேலடுக்கு சுழற்சி
இந்நிலையில் இலங்கை வரை வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கனமழை பெய்யும்
இதன் காரணமாக நாளை மறுநாள் வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என்றும் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
மேலும் இந்த மேலடுக்கு சுழற்சி அக்டோபர் 5ஆம் தேதியை ஒட்டி தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். பின்னர் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று வீசும்
இதைத்தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலில் பலத்த காற்று வீசும் என்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக திரும்பவேண்டும்
இதனால் வரும் 6 முதல் 8 ஆம் தேதி வரை மீனவர்கள்
லட்சத்தீவுகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ்கடலில் மீன்பிடிப்பிற்கு சென்ற மீனவர்கள் அக்டோபர் 5ஆம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.