தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... மேலும் மழைக்கு வாய்ப்பு!
இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் அடுத்த 2 நாட்களுக்கு தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும் வடதமிழகத்தில் கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் தலை காட்டினாலும் அடுத்தது மழை எப்போது தொடங்குமோ என்று மக்கள் வானிலை மைய அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சென்னையில் இன்று காலை முத்ல் வெயில் சுள்ளென்று அடித்து வருவதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
சென்னை புறநகர்ப் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் நேற்று நெல்லை மாவட்டத்தில் அதிகபட்ச அளவு மழை பெய்ததால் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் கடைகளில் மழைநீர் புகுந்துள்ளது.
குறைந்த காற்றழுத்தம்
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது :இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
2 நாட்கள் மழை நீடிக்கும்
கடந்த 24 மணி நேரத்தில் தென்தமிழகம், வடகடலோரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும் வடதமிழகத்தில் கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் தென்தமிழகம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.
மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
டெல்டா மாவட்டம் மற்றும் தென்தமிழகத்தில் கடலுக்கு செல்லும் மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும். சென்னையில் நகரில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் அதிக மழை
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சிதம்பரம், கேளம்பாக்கம், ஸ்ரீவைகுண்டத்தில் 8 செ.மீ மழையும். நாகப்பட்டினம், சேரன்மாதேவி வேதாரண்யத்தில் 7 செ.மீ மழையும், தரங்கம்பாடி, காரைக்காலில் 6 செமீ மழையும் பதிவாகியுள்ளது. பரங்கிப்பேட்டை, மகாபலிபுரம், ராதாபுரத்தில் 5 செ.மீ மழையும், சென்னை டிஜிபி அலுவலகம் பூந்தமல்லி, மணிமுத்தாறு, நுங்கம்பாக்கத்தில் 4 செமீ என்ற அளவிலும் மழை பதிவாகியுள்ளது.