சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 90% நிறைவு- 2017 மே-க்குள் முழுமையடையும்?
90 சதவீத சென்னை மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் வருகிற 2017-ம் ஆம் ஆண்டு மே-க்குள் அந்தப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்து சேவையை தொடங்க தயார் நிலைக்கு வந்துவிடும் என்றும் அதிகாரிகள் தரப்பில
சென்னை: கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் ராட்சத இயந்திரங்களைக் கொண்டு மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை தோண்டும் பணிகள் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் நிறைவடைந்து தயார் நிலைக்கு வந்துவிடும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியிருப்பதாவது: மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், எஞ்சிய பணிகள் அடுத்த ஆறு மாதத்தில் முடிவடைந்து விடும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக பல்வேறு நாடுகளில் இருந்து பதினோரு ராட்சத இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு சென்னை மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதை தோண்டும் பணிகள் தொடங்கப்பட்டன. அவற்றில் தற்போது 5 இயந்திரங்கள் மட்டுமே சுரங்கப்பாதை தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளன.
எஞ்சிய இயந்திரங்கள் பணி முடிந்து சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டன. தற்போது, சுரங்கப்பாதை தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ள இயந்திரங்களும் எஞ்சிய பணி முடிக்கப்பட்டவுடன் திருப்பி அனுப்பப்படவுள்ளது.
மொத்தமுள்ள, 24 கிலோ மீட்டர் தொலைவில் 18 கி.மீ அளவிலான சுரங்கம் தோண்டும் பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. அதில் 16 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கம் தோண்டும் பணிக்கு ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. 6 கிலோ மீட்டர் தொலைவு தோண்டும் பணிகள் ரயில் நிலையங்கள் அருகில் வருவதால் அவற்றில் தோண்டும் பணிக்கு ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்படவில்லை.
சில இடங்களில் மண்ணின் தன்மை குறித்து கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. கடின பாறைகளை குடைந்து சில இடங்களில் சுரங்கப்பாதை தோண்டப்பட்டது.
வேறு சில இடங்களில் கலவை மண்ணாக இருந்தது. சில இடங்களில் உலர் தன்மையுடைய மண் காணப்பட்டது. அந்த மண் பல்வேறு இடங்களில் சாலை மேற்பரப்பில் விரித்து மெட்ரோ ரயில் தடம் அமைக்க உதவியது.
கடந்த 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் எல்என்டி உள்ளிட்ட நிறுவனங்களுடன் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானம், வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் ஏற்படுத்தியது.
அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் அண்ணா சாலையில் சுரங்கம் தோண்டுவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதாவது அந்த பணியை மேற்கொண்ட நிறுவனம் அந்தப் பணியை கைவிட்டது. இதனால் சென்னை மெட்ரோ நிறுவனம் அந்த நிறுவனத்தை ஒப்பந்தப் பணியிலிருந்து நீக்கியது.
இதனையடுத்து அந்தப் பணி எல்என்டி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது அந்த பணிகளும் வேகமாக நடந்து வருகிறது.