ஆலந்தூர்- பரங்கிமலை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்... இன்று நடந்தது!
சென்னை: சென்னை ஆலந்தூர்- பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இன்று நடந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில், அடுத்த கட்டமாக ஆலந்தூர் - பரங்கிமலை இடையே இன்று மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது, சென்னை வண்ணாரப்பேட்டை-விமான நிலையம் நடைபாதையின் நீட்டிக்கப்பட்ட சைதாப்பேட்டை-ஆலந்தூர்-விமான நிலையம் தடத்தின் ஒரு பகுதி ஆகும்.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் அதிகாரி கூறுகையில், "மெட்ரோ ரயில் பரங்கி மலை நிலையத்துக்கு பிரச்னைகள் இல்லாமல் இயல்பாக சென்றடைந்தது. வரும் நாட்களில் மேலும் சில சோதனை ஓட்டங்கள் நடைபெறும்" என்றார்.
இந்தப் பாதையில் மெட்ரோ ரயில் பயணிகள் சேவை தொடங்குவதற்கு, மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையரிடம் அனுமதி பெற்றிட வேண்டும். அதற்கு மேலும் இதுபோன்று பல வகையான சோதனை ஓட்டங்கள் மற்றும் பரிசோதனைகள் மிகவும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
சோதனை ஓட்டங்கள் முடிந்து அடுத்தாண்டு முதல் இந்தப் பாதையில் மெட்ரோ ரயில் பயணிகள் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.