சென்னை மெட்ரோ ரயில்... ஒரே மாதத்தில் ரூ.3 கோடி வசூலை அள்ளியது
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் கடந்த ஒரு மாதத்தில் ரூ. 3 கோடி வரை வசூல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 30ம் தேதி சென்னை கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை நடந்து வருகிறது.
சென்னையின் புதிய சுற்றுலாத் தளமாகவே மெட்ரோ ரயில் மாறி விட்டது எனக் கூறினால் மிகையில்லை. அந்தளவுக்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதை மக்கள் விரும்புகின்றனர். பணி நிமித்தமாக மெட்ரோ ரயிலில் பயணம் செல்பவர்கள் மட்டுமின்றி, புதிய அனுபவத்திற்காகவும் அதில் தினந்தோறும் ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர்.
இதனால், தொடக்க நாளன்று மட்டும் ரூ. 16.77 லட்சம் வசூலானது. அதனைத் தொடர்ந்து முதல் வாரத்தில் 3.26 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ததைத் தொடர்ந்து, ரூ. 1.08 கோடி வருவாய் கிடைத்தது.
தற்போது சென்னை மெட்ரோ ரயில் தனது பயணத்தைத் தொடங்கி ஒரு மாத காலம் முடிவடைந்து விட்டது. இந்த ஒரு மாதத்தில் ரூ. 3 கோடி வருவாய் மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.
முதல் சனி, ஞாயிறுகளில் மட்டும்...
இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், "சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய முதல் வாரத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 1.56 லட்சம் பேர் பயணம் செய்ததில் ரூ.48.6 லட்சம் வருவாய் கிடைத்து உள்ளது.
விடுமுறை நாட்களில்...
அதுவும் பொதுமக்கள் மெட்ரோ ரயிலை பார்ப்பதற்காக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை விடுமுறை நாட்களில் பொதுமக்கள் அதிகம் வருகை தந்தனர்.
மழையால் குறைந்த கூட்டம்...
தொடர்ந்து வந்த நாட்களில் மழை போன்ற பல்வேறு காரணங்களால் கூட்டம் சற்று குறைந்து காணப்பட்டது. இதனால் வசூலும் சற்று குறைந்தது.
ரூ. 3 கோடி முதல்...
முதல் மாதத்தில் ரூ.3 முதல் ரூ.4 கோடி வரை வருவாய் கிடைத்திருக்க வாய்ப்பு உள்ளது. சரியான தொகை எவ்வளவு என்பது குறித்து ஓரிரு நாட்களில் தெரியவரும்.
10 லட்சம் பேர்...
ரயில் போக்குவரத்துத் தொடங்கிய முதல் மாதத்தில் சுமார் 10 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்" என இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.